ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன் இம்மாயையின் கீழ்மைஎவ் வாறே! 

English Meaning:
He who planted seed, knew it not;
She who received saw it not;
The Creator knew, but He told none;
They Lord who Truth reveals is also there;
Yet I saw not Maya,
How cunning was her stealthy Conduct!

Tamil Meaning:
கருவை இட்டவனாகிய தந்தையும் அதனை இட்டமை இடாமைகளை அறிந்தானில்லை. ஏற்றவளாகிய தாயும் அதனை ஏற்றமை ஏலாமைகளை அறிந்தாளில்லை. அக்கருவாகிய பொன்னைக் குழவியாகிய அணியாக்குகின்ற பொற்கொல்லனாகிய பிரமன் அவற்றை அறிந்திருந்தும் அவருள் ஒருவர்க்கும் சொல்லிற் றிலன். வினை நிகழ்ச்சி இருந்தவாறே அப்பொற் கொல்லனுக்குப் பணிக்கின்ற தலைவனாகிய சிவனும் அவ்விருவரோடே இருக் கின்றான்; அவனும் அவர்க்கு அவ் வினையியல்பையே உரைத்திலன். அந்தோ! இம்மாயையின் வஞ்சனை எவ்வகையினதாய் உள்ளது!
Special Remark:
`இதனினின்றும் உயிர்கள் உய்திபெறுதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ``பட்டாங்கு`` என்பதில் படுதற்கு வினை முதலாகிய `வினை` என்பது வருவிக்க. சொல்லுதல் - பணித்தல். ``பரமன்`` என்றது, `தலைவன்` என்னும் பொருட்டு. கெட்டேன், இரக்கக் குறிப்பு இடைச்சொல். தட்டானும், பரமனும் உரையாமை, இட்டானும் ஏற்றாளும் தம்மை எண்ணாமையாலாம்.
இதனால், கருவினது தோற்றம் முதலியவற்றிற்குத் தந்தை தாயரே உண்மை நிமித்த காரணர் அல்லாராதல், அவர் மாயையின் வலியைக் கடக்கமாட்டாமையின் வைத்து வலியுறுத்தப்பட்டது.