ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. 

English Meaning:
Even the day, ruinous Karma trailed after Jiva,
He designed ways of preservation numerous;
He surrounded the foetus with water
Kept it safe from burning Muladhara Fire,
He drew charmed circles eddying,
Around the budding life, from Pasa harassing
And so preserved it safe and cool.
Tamil Meaning:
கருவினுள் வீழ்ந்த உயிர் அவ்விடத்தே இறக்கும் ஊழ் உளதாயின், பதிந்த கருவைச் சிவபெருமான் பலநிலைகளில் பல்லாற்றான் அழிந்தொழியச் செய்வான். அவ்வாறின்றிப் பிறந்து வாழும் ஊழ் உளதாயின், இடையூறுகள் பலவற்றால் தாக்கப்படுகின்ற வினைக்கட்டுடைய அக்கருவைச் சிவபெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் சுழிகளில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோற் குவையிலிருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும், நெருப்பாலும் அழியாது காப்பான்.
Special Remark:
ஒழி - ஒழிதல்; அழிதல். முதனிலைத் தொழிற்பெயர். ``செய்யும்`` என்பது முற்று. ``வினையுற்ற நாள்`` என்பது தாப்பிசையால் முன்னரும் சென்றியையும். மூன்றாம் அடியை முதல் அடியின் பின்னர்க் கூட்டுக. உயிர் மண்ணில் வாராது கருப்பையுள் நிற்கும் காலத்தை ``வழி`` என்றார். ``சுழிபல வாங்கி நீராட்டி, வைத்தழு வாங்கிச் சுடாமல் வைத்தான்` எனக் கூட்டுக. வை - வைக் கோல். வைக்கோற் குவையைத் `தழு` என்றல் வழக்கு.
இதனால், கருவைச் சிவபெருமான் வினைக்கேற்றவாறு அங்கே அழித்தல், காத்தல் இரண்டனையும் செய்தல் கூறப்பட்டது.
குழவி கருவினுள் அழியாது தப்புதலை மாணிக்க வாசகர் போற்றித் திருவகவலுள் பலபட விரித்தருளிச் செய்தார்.
``கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவதாயும்
பரிணமித் தழிவதாயும் பாலனாய் அழிவதாயும்``
எனச் சிவஞான சித்தி (சூ. 2.93) யும் கூறிற்று.