ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன்
அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி
நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே. 

English Meaning:
As on to a leaf-like device
He mounted my life;
And there;
With balance-like precision planted,
Subtle senses five;
And other Tattvas thirty;
And thus fashioned a body;
A steaming cauldron with openings nine.
Tamil Meaning:
எனது உடலில் நிற்கின்ற சிவபெருமான் ஒவ்வோர் உயிர்க்கும் கருவில் அதன் விதியாகிய எழுத்தோலையைத் தலையிலே வைத்து, தானே இயங்குதல் உடைய யந்திரம் போன்ற ஐந்து உடல்களை நிலைபெறச் செய்தளித்து, அவ் ஐந்துடல்களில் வேறு பட்ட, நிலையான முப்பது கருவிகளை அமைத்து, ஒன்பது வாய்களை உடைய ஒரு துருத்தியைச் செய்து தருகின்றான்.
Special Remark:
ஓலையை ``இலை`` என்றது, `பத்திரம்` என்னும் வடநூல் முறை. அதன்கண் பொறிக்கப்படுவது எழுத்து. ``அலைப் பொறி`` என்பதில் அகரத்தைத் துகரமாக மயங்கினமையின், பாடம், ``துலைப் பொறி` எனப் பிழைபட்டது.
ஐந்து உடல், மேலே சொல்லப்பட்டன. (பாடல் - 402, 424) நிலைத்தல், தம் காரியம் அழியினும் தாம் அழியாது நிற்றல். முப்பது கருவிகள், ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவங்களில் புருடன் ஒழிந்தவை. புருடன் தனித் தத்துவம் அன்றாதலின் அதனை நீக்கி ஓதினார். `நீர்மையாக` என ஆக்கம் வருவித்து `அவற்றின் தன்மை தோன்ற` என உரைக்க.
உலைப் பொறி - துருத்தி. `ஒன்பதில் உலைப்பொறி ஒன்று செய்தான்` என மாறிக் கூட்டுக. ஒன்பது, எண் ஆகுபெயர். `ஒன்பதில்` என்பதில் இல், ஐந்தாம் உருபு. ``கரு`` என்றதை ``ஈசன்`` என்றதன் பின்னர்க் கூட்டி, இரண்டையும் முதற்கண் வைத்து உரைக்க. ஒன்பது வாயையுடைய துருத்தி, இல் பொருள் உவமை. இஃது உவமையாகு பெயராய், உடம்பைக் குறித்தது. `ஒன்பது வாய்கள்` இவை என்பதை அடுத்துக் காண்க.
இதனால், துருத்திபோல் அமைந்த தூல உடம்போடே ஏனை நான்குடம்புகளும் ஒட்டிக்கிடக்கச் செய்தல் கூறப்பட்டது.