ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகிற் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்;
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே. 

English Meaning:
The masculine flow dominates, the infant is male born,
The feminine dominates, the infant is female born;
When the two are in force equal, a hermaphrodite is born;
When masculine flow gushes in plenty,
The infant born will sway the world entire;
When masculine flow is scanty,
Naught indeed conception is.
Tamil Meaning:
கலவியால் கருப்பையுள் கலக்கும் பொருள்களில் ஆண்மகனது வெண்டுளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி ஆணாகும். பெண்மகளது செந்துளி மிகுந்திருக்குமாயின் பிறக்கும் குழவி பெண்ணாகும். இரண்டும் சமமாய் இருக்கின் பிறக்கும் குழவி அலியாகும். அதுவன்றி, மிகுந்துள்ள வெண்டுளியில் உயிராற்றல் மிக்கிருக்குமாயின் பிறக்கும் மகன் ஆற்றல் மிக்கவனாய் அரசாளுதற்கும் உரியவனாவான். அவ்வாறன்றி மிகுந்திருக்கும் செந்துளியில் அழிக்கும் ஆற்றல் மிக்கிருக்குமாயின் பதிந்த கருப் பயனின்றி அழிந்தொழியும்.
Special Remark:
வெண்டுளி கருவாதலும், செந்துளி அதனை வளர்ப்பதும் ஆகும். அதனால், அவை இரண்டின் தன்மைக்கும் ஏற்பக் கரு அமையும் என்க. பாழ் நவம், `பாணவம்` எனப் புணர்ந்தது. நவம் - புதிது புதிதாய்த் தோன்றும் பொருள். பாழ் நவம் - பாழாதற்கு ஏதுவாம் பொருள். ஆண், பெண் என்பவற்றுள் முன் வந்தவை ஆகுபெயர்கள்.
இதனால், முன்னை மந்திரத்துள் ``பூண்பது மாதா பிதாவழி போலவே`` என்றது விளக்கப்பட்டது.