ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்
பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்
பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை
பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே. 

English Meaning:
If after emission,
The male`s breath five finger-length extends,
The infant born lives a hundred years;
When breath to four finger measure stretches,
To age eighty the infant lives;
The Yogi who knows the science of breath control
If in sex act He indulges,
He, the vital flow, according regulates.
Tamil Meaning:
துணையர் (தம்பதிகள்) கூட்டத்தில் வெண்டுளி கருப்பையினுள் சென்றபின்பும் ஆடவனுக்கு ஐந்து மூச்சு நிகழுங் காறும் இருவரும் பிரியாது முன்போலவே புல்லிக் கிடப்பாராயின், பிறக்கின்ற குழவியது வாழ்நாள் நூறாண்டாக அமையும். நான்கு மூச்சு நிகழுங்காலும் பிரியாதிருப்பாராயின் அஃது எண்பது ஆண்டாக அமையும். இவ்வாறே ஒரு மூச்சிற்கு இருபது ஆண்டாகக் கணக்கிட்டு அறியலாம். ஆயினும், மூச்சுக்களின் கணக்கை உண்மையாக அறிவதோ, மூச்சினை நெறிப்படுத்தி இயக்குதலோ பொதுமக்களுக்கு இயலாது. யோகிகளாயின் அக்கணக்கினை அறியவும், அதன்படி மூச்சினை நெறிப்படுத்து இயக்கவும் வல்லராவர்.
Special Remark:
வெளிக்காற்றை ஒருமுறை உள்ளே வாங்கிச் சிறிது நிறுத்திப் பின் வெளியே செல்லவிடுத்து மீண்டும் அவ்வழியே வாங்கி உள்ளே நிறுத்துதல் `ஒருமூச்சு` எனப்படும். இஃது எல்லா மக்கட்கும் இயல்பில் நிகழ்வதே. ஆழ்ந்த நினைவு இயற்கைக்கு மாறுபட்ட வழிச்செலவு, வருந்திச் செய்யும் தொழில் முதலியவற்றில் மூச்சின் இயக்கம் இயற்கை நிலையினின்றும் வேறுபடும். அவ்வாற்றால் கலவி முடிவின்கண்ணும் அது மாறுபடுதல் இயல்பே. அதனால், கலவிக்குப் பின்னும் கலந்தோர் இருவரும் தம் இயற்கை நிலையில் இருத்தல், கருக்குழவியது உடற்கட்டு முதல் நிலையிலே நன்கு அமைதற்கு வாயிலாய் அமைகின்றது என்க. மூக்கு, வாய் என்பவை வழியாக மூச்சு நிகழ்தலே வெளிப்படையாக விளங்கினும், உடம்பு முழுதும் உள்ள நுண்டுளைகள் அனைத்து வழியாகவும் அது நிகழ்வதேயாம். அதனால் தந்தை தாயரது - சிறப்பாகத் தந்தையது - மூச்சுக் காற்று, கருவுற்ற குழவிக்குப் பயன்தருவதாகும் என்க.
பாய்ந்திடும் யோகிக்கு - மூச்சு நெறிப்பட இயங்கி நிற்கும் யோகிக்கு - `பாய்ந்திடும் யோகிக்கு இவ்வகை பகுத்தறிந்து பாய்ச்சலும் ஆம்` எனக் கூட்டுக. ``பாய்ச்சல்`` என்றது, இங்கு மூச்சுக் காற்றினை.
இதனால், சிவபெருமான் குழவிக்கு வாழ்நாளை வரையறுக்குமாறு கூறப்பட்டது.