ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

English Meaning:
They who birth`s finals saw,
Alone knew how purusha,
Of Tattvas five and twenty,
The body corporeal entered;
None else know,
That which sought woman`s birth-pit,
In form twain, rushed within.
Tamil Meaning:
மெய்யுணர்வால் பிறப்பின் நீங்கிய அறிவர் கண்ட, நில முதல் புருடன் ஈறாக உள்ள இருபத்தைந்து கருவிகளும் (தத்துவங்களும்) தந்தை உடலிலே பொருந்தியிருந்து, பின் தாயது கருப்பைக்குள்ளே, ஆண், பெண் இரண்டில் யாதேனும் ஓர் உருவமாமாறு புகும். இதனை மெய்யுணர்வில்லார் அறியார்.
Special Remark:
மற்று, அசைநிலை. ``ஓரார்`` என்றதனை ஈற்றில் வைத்து உரைக்க. `புகுந்த அது` என்பதில் அகரம் தொகுத்தல்; புகுதலை அனுவாத முகத்தாற் கூறினார் என்க.
இதனால், சிவபெருமான், தாயது கருப்பைக்குள் மட்டுமன்றி, அதிற் புகுமுன்பே தந்தையது உடம்பில் அதனை வைத்துக் காத்தல் கூறப்பட்டது.