ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாதா உதரம் சலமிகில் மூங்கையாம்
மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. 

English Meaning:
When at the time of union,
The mother`s bowels are heavy exceeding,
A dullard will be born;
If urine exceeds,
A dumb will be born;
If both exceed,
A blind will be born;
Thus is it for the infant born
The mother`s condition according.
Tamil Meaning:
கலவிக் காலத்தில், தாயது வயிற்றில், நீங்கற் பாலதாகிய மலம் நீங்காது தங்கியிருக்குமாயின், அவள் வயிற்றில் தந்தையிடமிருந்து வந்து கருவாய்ப் பொருந்திய குழவி, மந்த புத்தி உடையதாய் இருக்கும். நீங்கற் பாலதாகிய நீர் நீங்காது அவள் வயிற்றில் தங்கியிருக்குமாயின், குழவி ஊமையாகும். மலம், நீர் இரண்டுமே நீங்கற்பாலன நீங்காது தங்கியிருக்கின், குழவி குருடாகும்.
Special Remark:
`ஆதலின், கலவிக் காலத்தில் துணையர் மல சல உபாதிகள் இல்லாதவராய் இருத்தல் வேண்டும்` என்பதாம். இவ்வாறு இருத்தற்கு அவர் இயல்பிலே நல்லுடல் உடையராதல் வேண்டும். இந்நிலை குழவி வளர்ச்சிக் காலத்தில் எனவும் கருதுவர். நாயனார் முன்னும் பின்னும் கலவிக்காலத்தையே கூறி வருதல் நோக்கத் தக்கது.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும் குழவியது வினைக் கீடாகச் சிவபெருமான் அதன் புற உறுப்புக்களையும், அகக் கருவிகளையும் அமைக்குமாறு கூறப்பட்டது.