ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

English Meaning:
There two in accord united;
And from their vital flows
Emerged the infant form;
But when into it Jiva,
Who in myriad bodies has dwelt of yore,
Now entered,
Lo! It is dominated by Mind;
Maya subtle pervades it.
Tamil Meaning:
காமம் பொருந்திய ஒருவனும் ஒருத்தியுமே பற்றுக் கோடாக நின்று அவரின் நீங்கிப் பாய்கின்ற கருமுதற் பொருள்கள், பின்பு கருப்பதிந்து உருவாதற் பொருட்டுப் பதிவிற்கு முன்பே அப்பொருள்களில் அவர் உடம்புகளிலே பல கூட்டுப்பொருள்கள் வந்துசேர, கருப் பதிந்தபின் அக்கருவிற்குக் குணங்கள் மேற்கூறிய முறையில் அமையும்.
Special Remark:
`அதனால், மேற்கூறியவாறு நிகழும் கூட்டத்தினால் பிறக்கும் மைந்தர் மேற்கூறிய வகையினராய் இருப்பர்` என்பது குறிப்பெச்சம். ஏயம் - இழிவு; காமம். `தஞ்சம்` என்பது `தஞ்சு` எனக் கடைக்குறைந்து நின்றது. `நிறம்` என்னும் பொருட்டாகிய `சாயம்` என்னும் திசைச்சொல் நாயனார் காலத்து இன்மையின் `சாயத்து` என்பது பாடம் ஆகாது. கரு, ஆகுபெயர். உருவாம் என - உருவாய்த் தோன்றும் என்னும் காரணத்தால். காயம் - கூட்டுப் பொருள். கலந்து, `கலக்க` என்பதன் திரிபு. ``அது`` என்றது, `கரு` என்றதன் இயற் பெயர்ப்பொருளை. காண - உருத்தோன்றுமாறு. மாயம் - நிலை இல்லாது மாறிவருகின்ற. மனம் - அந்தக்கரணம். அவை ஒடுங்குதல் குணதத்துவத்திலாகலின், ``மனோலயம்`` என்றது ஆகுபெயரால், முக்குணத்தை உணர்த்திற்று. ஆனது - பொருந்திற்று.
இதனால், மேலதற்குக் காரணம் கூறப்பட்டது. இதனானே கருவில் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் `மனோமய கோசம்` எனப்படும் குண சரீரத்தைக் கூட்டுமாறும் பெறப்பட்டது. குண சரீரம், பர சரீரம் முத்திறத்தினுள் ஒன்று. பரசரீரத்தின் முத்திறம், `காரண சரீரம், கஞ்சுக சரீரம், குண சரீரம்` என்பன. இவைமுறையே `ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமய கோசம்` எனவும் பெயர்பெறும்.
இதனால், கருவினுள் நின்ற உயிர்க்குச் சிவபெருமான் சூக்கும தேகத்தையும் வாக்குகளையும் தருதல் கூறப்பட்டது.