ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்
காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்
நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்
பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே. 

English Meaning:
In the union of sexes opposite
The light of life is born shielded true;
A bubble it is in Life`s watery expanse;
A shadow that spreads on earth below;
Sheathed in the subtle Body-Eight.
Tamil Meaning:
தாய் தந்தையரது கூட்ட உறுப்புக்கள் தம்மிற் கூடிய காலத்து முன்பு தந்தையுடலில் நின்ற கரு, தாயது கருப்பையுட் சென்று கலந்து முட்டை (பிண்டம்) ஆகும். அம்முட்டையினுள் நீர்க்குமிழியில் நிழல்போல நுண்ணுடம்புக் கருவிகள் எட்டும் பருவுடல் எங்கும் பரந்து அதனைத் தாங்கி நிற்கும்.
Special Remark:
`இவ்வாறு தாங்கிநிற்றல், அவன் திருவுளக் குறிப்பால் அல்லது ஆகாது` என்பது கருத்து. காவுடை - சுமையாதல் உடைய. ``தீபம்`` என்றது, கருவை என்பதை 478 ஆம் திருமந்திரம் பற்றி அறிக. இவை இரண்டானும், `கரு, பருவுடம்பு` என்பது கூறினார். நுண்ணுடம்புண்மையை உணராதார், `இப்பருவுடம்பே உடம்பு` என மயங்குவராதலின், அவர், `கருவுற்பத்தியில் இறைவன் திருவருள் என்பது இல்லை` என்றலும் மயக்க உரையேயாம் என்றற்குப் பருவுடம்பிற்குப் பற்றுக்கோடு நுண்ணுடம்பாதலை ஓதினார். குமிழி யில் நிழல், நுண்ணிதாய் உள்நிற்றற்குக் கூறிய உவமை. பாருடல் - பருவுடல். இத்திருமந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், மேலதற்கு ஏதுக்கூறி வலியுறுத்தப்பட்டது.