ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே. 

English Meaning:
The Lord made the body,
A name and form it assumed;
Then, for Jiva his redemption to seek
He created earth and Tattvas many,
—Thus speak the Vedas.
Tamil Meaning:
உயிர்கள் தூலமும், சூக்குமமும் ஆய உடம்புகளையே உடம்பாகப் பற்றிநில்லாது, சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்தே தம்முள் ஒன்றித் தமக்கு உடம்பாகுமாறு அதனை மொழிதல் (வாசகம்), முணுமுணுத்தல் (உபாஞ்சு), கருதல் (மானதம்), உணர்தல் (சுத்தமானதம்) என்னும் முறைகளில் கணித்து (செபித்து)ப் பாசங்களினின்றும் நீங்குமாறு வேதம் முதலாகப் பொருந்திய பரந்த நூல்களை மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களிலும் வகுத்து வைத்துள்ளான்.
Special Remark:
நூல்கள் என்றது சொற்பிரபஞ்சத்தை. அவை நிவிர்த்தி முதலிய கலைகளில் வைகரி முதலிய வாக்குக்களாய் நிற்றலை அறிந்துகொள்க. வாக்குகள் சுத்த மாயையின் காரியங்களாம். அதனால், அவை மயக்கத்தை நீக்கித் தெளிவுதரும் என்க. `பாச ஞானத்தால் மயங்கும்படி பொருட் பிரபஞ்சத்தால் உயிர்களைக் கட்டி வைத்த சிவபெருமான், பின்னர் அதினின்றும் நீங்கிப் பசுஞானமும், பதிஞானமும் முறையானே எய்தி வீடுபெறுதற்குச் சொற்பிரபஞ்சத்தை யும் அமைத்துள்ளான்` என்றவாறு. `வேதமொடு` என்ற எண்ணிடைச் சொல் தொகுத்தல்.
இதனால், மேல் ``கட்டி அவிழ்த்திடும்`` என்றவழி, `அவிழ்த் தற்கு வாயிலாவன எவை என்னும் அவாய்நிலை நிரப்பப்பட்டது`. சிவபெருமான் கருவினுள் வாக்குகளைக் கூட்டுதல் மேலே (தி.10 பா.454) கூறப்பட்டது.