ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே. 

English Meaning:
He is milky white in hue
Effulgent is He like the sun;
He is benignant;
He pervades the entire body
And diffuses His tenderness;
He contained the rage of fire in Muladhara
This He ordained, in ways diverse.
Tamil Meaning:
கருவிற்குத் தூலதேகம் அமைந்த பின்னர் தாயது சந்திரகலையாகிய மூச்சுக் காற்றுச் சூரிய கலையொடு மாறு கொள்ளாமல் இயங்கிக் குழவியது தூலதேகம் முழுதும் பரவிக் குளிர்ச்சியைத் தந்து வளரப்பண்ணும். அவளது சூரிய கலையாகிய மூச்சுக் காற்றும் அவ்வாறே சென்று குழவியின் உடலில் வெப்பத்தை உண்டாக்கி அதனை அழியாதிருக்கச் செய்யும். இவ்வாறு அவ்விரு வகைக் காற்றினையும் சிவபெருமான் தாயது மூலத்தின்கண் உள்ள வெப்பம் மிக்கெழாது அளவில் நிற்குமாறு அமைக்கின்றான்.
Special Remark:
`ஒத்து எங்கும் புகுந்து` என்பதை முன்னும் கூட்டி, `பால்வண்ணன் ஒத்து மேனி எங்கும் புகுந்து பதம் செய்யும்` எனவும், `பகலோன் ஒத்து உடல் எங்கும் புகுந்து இதம் செய்யும்` எனவும் உரைக்க. பால்வண்ணன் - சந்திரன். கருவில் நிற்கும் குழவிக்குத் தாயது மூச்சே மூச்சாவதன்றி வேறில்லையாகலின், பொதுப்பட வாளா ஓதினார். தேகத்தை அழியாமல் இருக்கச் செய்வது வெப்பமே யாகலின், அதனை, ``இதம்`` என்றார். பதம் குளிர்ச்சியாதல் வெளிப்படை.
இதனால், சிவபெருமான், கருவினுள் குழவியது தூல தேகத்தை வளர்த்தல் கூறப்பட்டது.