ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் வனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே. 

English Meaning:
In union`s rapture they kneaded the clay
For Him to fashion sorrow`s tenement;
The kiln burnt, the pitcher emerged,
With channels nine and Tattvas eighteen.
Tamil Meaning:
ஒருவனும், ஒருத்தியும் ஆகிய இருவர் இன்பம் நுகர்தற்கண் பொருந்த வைக்கும் மண்ணால் துன்பத்திற்கு ஏதுவான கலங்கள் பலவற்றையும் செய்பவன் ஒருவனே. அப் பல கலங்கள் ஆவன, நீர்ச்சால்கள் ஒன்பதும், அவற்றில் நீரை முகந்து ஆள்கின்ற கலயங்கள் பதினெட்டுமாம். இவ்வாறு குயவனது சூளை கலங்களை உருவாக்கிற்று. அதனாலே கலங்கள் உளவாயின.
Special Remark:
மண், கருப் பிண்டம். ``கலசம்`` என்றது, `கலம்` எனப் பொதுப்பட நின்றது. உடம்பு ஒன்றேயாயினும், அதன் உட்கூறுகளைப் பகுத்துணர்த்துதற்குப் பலவாகக் கூறினார். அணைவான், உயிர், ஒன்பது, ஒன்பான் துளை (நவத்துவாரம்). அவை, கண் இரண்டு, காது இரண்டு, மூக்கு இரண்டு, வாய் ஒன்று, எருவாய் ஒன்று, கருவாய் ஒன்று. இவை நீர்வடிவாய்க் கழியும் கழிவுப் பொருள்கள் வெளிப் படும் பெருவாயில்களாதல் பற்றி ``நீர்ச் சால்`` என்றார். பதினெட்டா வன, நானூற்று ஐம்பதாம் திருமந்திரத்தில் குறிக்கப்பட்ட கருவிகள். அவை அருவப் பொருளாய் நின்று இவ்வாயில்கள் பயன்படச் செய்தலின், `கலயம்` என்றார். சூளை இறைவன் செயல். விளைந்தது, கிடைத்தது; இவ்வொருமை தொகுதி மேல் நின்றது. `தான், ஏ` அசைநிலைகள்.
இதனால், உயிர்களின் பொருட்டு உடம்பை அமைக்குமா றெல்லாம் கூறப்பட்டன.