ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

இன்புறு காலத் திருவர்முன்பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே. 

English Meaning:
When parents two in pleasure united,
Then was ordained, this body,
The sorrow-house of vexing pasa,
When that is to be,
At that hour of union, He ordained;
He, the Heavenly Lord.
Tamil Meaning:
முதற்கண் தந்தை தாயர் இன்பம் நுகர்கின்ற காலத்து அவர்தம் உடம்பினின்றும் வெளிப்படும் வெண்டுளி செந்துளிகளால் அமைந்த இல்லமாவது உடம்பு துன்பத்தைத் தருகின்ற வினையின்வழி அதனை நுகரும் அவ்வில்லமாகிய உடம்பின்கண் அதன் தலைவ னாகிய உயிர்க்கிழவன் பலவகைப் பண்புகள் பெற்று வாழும் காலத்தையும், அக் காலத்து அவனுக்கு உளவாகின்ற வாழ்க்கை முறைகளையும் கருவைத் தோற்றுவித்து வளர்க்கத் திருவுளம்பற்றிய அப்பொழுதே அதன்கண் அமையுமாறு சிவபெருமான் அமைத்து விடுகின்றான்.
Special Remark:
`முன்பு இருவர் இன்புறு காலத்து ஊறிய மனை` என்க. காரணப் பொருளின் தன்மையைக் காரியப்பொருள்மேல் ஏற்றி, ``ஊறிய மனை`` என்றார். ``நூலாக்கலிங்கம்`` (பதிற்றுப்பத்து 2ஆம் பத்து 2) என்பதிற்போல. வான் - பெருமை; தலைமை. உளம் - ஆன்மா; அதனை, `உளன்` என ஆண்பாலாக ஓதினார். அன்றி, இறுதிப்போலியாகக் கொள்ளினும் ஆம். அருளை, ``அன்பு`` என்றார்.
இதனால், கருவில் உள்ள உயிர் பிறந்தபின் வாழ்தற்குரிய முறைகளைச் சிவபெருமான் முன்பே வகுத்தமைத்தல் கூறப்பட்டது.
``பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்காடென்னும்
ஆறும்முன் கருவுட் பட்டது``
எனச் சிவஞானசித்தி (சூ. 2.9)கூறுதல் காண்க.