ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. 

English Meaning:
He conjoins the tattvas five and twenty
That in life past departed from me;
To my dear life awaken;
Thus He creates, seated within globular womb
He the Primal One creates
Knowing what I am to be.
Tamil Meaning:
ஓர் உயிரைக் கருப்பையுள் தோற்றுவிக்கின்ற சிவ பெருமான் அதன் முன்னைத் தூல உடம்போடு ஒழிந்த ஐந்து ஞானேந் திரியம், ஐந்து கன்மேந்திரியம், ஐந்து பூதம், சத்தாதி ஐந்து விடயம், வச னாதி ஐந்து விடயம் என்னும் இருபத்தைந்தையும் மீள அதன் சூக்கும உடம்பினின்றும் தோற்றுவிப்பான். அங்ஙனம் தோற்றுவித்தல், அக் கருப்பையுள் அத்தோற்றத்திற்குத் தடையாகவரும் ஊறுபாடு களையறிந்து அவற்றை நீக்குதற்பொருட்டு அவ்விடத் திருந்தேயாம்.
Special Remark:
முதற்கண் ``ஆக்குகின்றான்`` என்பது பெயர். ஏனைய, சொற்பொருட்பின்வருநிலையாய் நின்றன. `ஆதியும் எம் ஆருயிருமாகிய அவன்` என மாற்றியுரைக்க. கோளகை - வட்டம்; இங்குக் கருப்பை.
இதனால், சிவபெருமான், கருவைத் தோற்றுவித்தல் கூறப்பட்டது.