ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்று கரணமு மாய்விடும்
ஒட்டிய பாச உணர்வென்னுங் காயப்பைக்
கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே. 

English Meaning:
Of the eight organs of Body Subtle,
Are senses protean five
And cognitive instruments three—
Mind, will and cognition;
Know the dear Lord
Who fastened this body-bag,
With Desire`s sticky glue
Will in time unfasten it too.
Tamil Meaning:
நுண்ணுடம்புக் கருவிகள் எட்டனுள் தன் மாத் திரைகள் ஐந்தனையும் புலன்களாகக் கொள்கின்ற ஞானேந் திரியங்கள் ஐந்தும், அப்புலன்களைத் தம்பால் பற்றிக் கொள்கின்ற, எஞ்சிய `மனம், அகங்காரம், புத்தி` என்கின்ற அந்தக்கரணங்கள் மூன்றும் கூடிய உடம்பென்னும் பையினுள் உயிர் என்கின்ற சரக்கைச் சிவ பெருமான் முன்னர்க் கட்டிவைத்துப் பின்னர் அவிழ்த்து விடுவான்.
Special Remark:
நுண்ணுடம்பு இல்லையேல், பருவுடம்பு பயனிலதாம் என்பது கூறியவாறு. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் வான் முதலிய மாபூதங்கள் ஐந்தனையும் முறையே தோற்றுவித்துப் பின் அவற்றின் குணமாய்ச் செவி முதலிய ஞானேந்திரியங்கட்குப் புலனாய் வந்து பொருந்துதலால், `நிருவிகற்ப ஞானம்` எனப்படும் பொதுவுணர்வும், பின் அவற்றை மனம் முதலிய அந்தக் கரணங்கள் பற்றிக்கொள்ளுதலால் `சவிகற்ப ஞானம்` எனப்படும் சிறப்புணர்வும், தோன்றுதலின், `நுண்ணுடம்பு இல்வழி, யாதோர் உணர்வும் நிகழாது` என்பதனை,
``ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்கள் என்று
பேசுமாத் திரைகள் ஐந்தும் பிறக்கும்பூ தாதிகத்தின்;
நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும்``
எனவும்,
``சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்
கேற்றமாம் ஓசை யாதி இருங்குணம் இயைந்து நிற்கும்``
-சிவஞானசித்தி சூ. 2.64.65
எனவும்,
அந்தக் கரணம் அடைவே உரைக்கக் கேள்
அந்தமனம் புத்தியுடன் ஆங்காரம் - புந்தியிவை
பற்றிஅது நிச்சயித்துப் பல்கால் எழுந்திருந்தங்
குற்றதுசிந் திக்கும் உணர். -உண்மைவிளக்கம் - 17
எனவும் கூறுமாற்றான் அறிக. மாயா காரியங்களாகிய இக்கருவிகளின் வழி வரும் உணர்வெல்லாம் புறவிடயமேயாகலின், அவையெல்லாம் பாசஞானமே என்க. ஒட்டிய பாசம் - அவையே தானாகப் பொருந்திய மாயாகாரியங்கள். ``உணர்வென்னும் காயம்`` எனக் காரணத்தைக் காரியமாக ஒற்றுமை வழக்காற் கூறினார். கட்டி அவிழ்த்தற்கு `உயிர்` என்னும் செயப்படுபொருள் வருவித்துக்கொள்க. இது முதற் பதின்மூன்று திருமந்திரங்கள் அந்தாதியாய் வரும்.
இதனால், பருவுடற்கு நுண்ணுடம்பு இன்றியமையாததாதல் கூறுமுகத்தால் மேலது வலியுறுத்தப்பட்டது.