ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே. 

English Meaning:
Above the Muladhara
The Kundalini fire abides;
There in the water-filled womb
The infant lay, its tiny feet entangled;
That the sweet life in patience waiting
Its onward course may seek,
He ordained, releasing the Pranas ten.
Tamil Meaning:
ஆறு ஆதாரங்களினும் முதலாவதாக அறியப் படுகின்ற மூலதாராத்திற்குமேல் உதராக்கினியும், உணவாக உண்ணப் படும் நீரும் நிறைந்திருக்கின்ற சுவாதிட்டானத் தானத்தில், `பூதசார சரீரம், யாதனா சரீரம்` என்பவற்றிற்கேனும், அவை இரண்டுமின்றித் தனக்கேனும் (சிவனுக்கேனும்) சுமையாய் நின்ற உயிர் வந்து பொருந்துமாற்றை எண்ணி, முதற்கண் செந்நீராகிய நிலைக்களத்தை நிற்பித்து, அந்நிலையை அக்கரு வெளிப்போதுதற்குப் `பத்துத் திங்கள்` என்னும் சுமைக் காலத்தையும் சிவபிரான் ஆக்குகின்றான்.
Special Remark:
செந்நீர் - தாயின் கருப் பையுள் நின்று கருவைத் தாங்கி வளர்ப்பது. நிலைக்களத்தை, ``தாள்`` என்றார். நிலவுலக உடலாகிய பூத உடம்பை விட்ட உயிர் நுண்ணுடம்போடு சென்று, நல்வினை, பயன்தருமாயின், அவ்வுடம்பு பூதசார சரீரத்தைத் தோற்றுவிக்கப் புத்தேள் (தேவ) உடம்பு பெற்றுத் துறக்கத்தை (சுவர்க்கத்தை) அடை யும். தீவினை, பயன் தருமாயின் நுண்ணுடம்பு யாதனா சரீரத்தைத் தோற்றுவிக்க அதனைப் பெற்று நிரயத்தை (நரகத்தை) அடையும். இரண்டும் இல்லையாயின், நுண்ணுடம்போடே கல்லுப்போல் அதற்குரிய புவனங்களுள் யாதானும் ஒன்றிற் செயலற்றுக் கிடக்கும். அம்மூன்று நிலைகளுமே முறையே பூதசார சரீரம், யாதனா சரீரம், இறைவன் திருவருள் என்பவற்றிற்குச் சுமையாகச் சொல்லப்பட்டன. உயிர் நுண்ணுடம்பைப் பற்றி நின்று கருவில் வந்து பொருந்தித் தூல உடம்போடு பிணிப்புண்டு, அதுவே தானாய் ஒற்றுமைப்பட்டு, அதற்கேற்ற உணர்வுகள் அனைத்தும் பொருந் துதற்குப் பத்துத் திங்கள் கால எல்லை வேண்டுவதாதலையறிந்து இறைவன் அத்துணைக் காலமும் அக்கருவைத் தாய்க்குச் சுமையாமாறு வைத்துக் காக்கின்றான் என்றபடி. இதனானே ஊழ் வேறுபடுமாயின், சில திங்களுக்குள்ளே அவ்வுயிர் `அந்நிலையினின்றும் நீங்கிப் பிறிது நிலையை அடையச் செய்வான்` என்பதும் பெறப் பட்டது. ``அங்கி அப்புச் செறிகின்ற தானத்து`` என்றதனால், `அவ் விரண்டாலும் அக்கரு அழிவுறாது காக்கின்றான்` என்பதும் கூறியவாறாயிற்று. `ஞானத்து` என்பது பாடம் அன்று.
இதனால், அப்பெருமான் கருவை வளர்த்தல் கூறப்பட்டது.