ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 14. கர்ப்பக் கிரியை

பதிகங்கள்

Photo

உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்
பருவம தாகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடு மாயையி னாலே
அருவம தாவதிங் காரறி வாரே. 

English Meaning:
In months ten, it forms full
And then on earth in time appointed, it lands;
And grows, Maya fostering;
But who knows that Formless Maya!

Tamil Meaning:
தங்கிய கருவின் உருவம் பத்துத் திங்கள்காறும் கருப் பையிலே வளரும். பத்தாந்திங்களே பிறக்கும் பருவமாக, அப்பொழுது நிலத்தில் வந்து சேரும். வந்தபின் தாய் தந்தையரைப் புறந்தருபவராகப் பொருந்தி வளரும். அவ்வளர்ச்சி, சுவரெடுத்தல், ஆடைநெய்தல், மாலைதொடுத்தல் முதலியவற்றிற்போலக் கட்புலனாகாது, மாயையினாலே கணந்தோறும் நிகழ்தலை ஒருவரும் காணவல்லரல்லர்.
Special Remark:
`வளர்ந்தபின் அவ்வளர்ச்சியைக் கண்டு வியப்ப தல்லது, வளர்ச்சி கட்புலனாகாது` என்றற்கு ``மாயையினாலே`` என எடுத்தோதினார். இதனால், மாயையின் ஆற்றலும் அறியப்படும் என்க. அருவம் - கட்புலனாகாமை. ஆவது - வளர்வது; என்றது தொழிற்பெயர். `அருவமதாகிய ஆவது` என்க.
இதனால், கரு, கருப்பையுள் வளர்ந்து குழவியாய்ப் பிறக்குமாறும், பிறந்து வளருமாறும் கூறப்பட்டன.