ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

சீய குருநந்தி திருவம் பலத்திலே
ஆயுறு மேனி யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்போடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

English Meaning:
Form of Siva

A lion-hearted Guru is Nandi,
In the Holy Temple He does dance;
None know His Form divine;
Fiery red smeared white it is;
They who see His Form
Reach the haven of Refuge.
Tamil Meaning:
ஆசிரியராய் உள்ளார் அனைவர்க்கும் அவ் ஆசிரியத் தலைமையை அருளிய இயற்கை ஆசிரியத் தலைவன் சிவபெருமானே. அவனே திருவம்பலத்தில் கூத்துக் கோலமும் கொண்டு ஆடுகின்றான். அதனால் அவனது திருமேனியின் தன்மை ஆய்ந்துணரத்தக்கது. அதனை அவ்வாறு ஆய்ந்துணர்ந்தவர் யாரும் இல்லை அதன் தன்மையாவது, நெருப்புப் பார்வைக்குச் சிவப்பு நிறத்தையும், உண்மையில் வெளுப்பு நிறத்தையும் உடையதுபோல இருதன்மைப்பட்டது. அதனை உணர்ந்தால் அவனைச் சார்ந்து அவனுள்ளே இரண்டறக் கலந்துவிடலாம்.
Special Remark:
சீயம் - சிங்கம். இது தலைமை பற்றி வந்த உவமை. நந்தி ஆய் உறு மேனி என்க. ஆதல் - பொருந்துதல். மீட்டும் வந்த ``ஆய் உறு மேனி`` என்பது `அது` என்னும் சுட்டுப் பெயர் அளவாய் நின்று, ஆகுபெயரால் அதன் தன்மையைக் குறித்தது. ``ஆரும் அறிகிலர்`` என்றதனால், ஆய்ந்துணரற்பாலதாதல் பெறப்பட்டது. `தீ வெளுப்போடு செம்மை உறும் அத்தன்மை` என இயைக்க. தீயைப் பார்ப்போர் அனைவரும்` அது சிவப்பானது` என்றும் கருதுகின்றனர். `ஆயினும் தீ உண்மையில் வெளுப்பானதே` என நியாய நூலார் நிலை நாட்டுவர். இன்றைய அறிவியலாரும் `ஏழு நிறங்களின் சேர்க்கையே வெண்மை` என்பர். கூத்தப் பெருமானது சத்தி, `திரோதான சத்தி, அருட் சத்தி` என இரண்டாதல் பற்றி `சத்தி வடிவான அவனது மேனி இரு தன்மையுடையது` எனஅறார். திரோதான சத்தியால் பெத்தத்தையும், அருட்சத்தியால் முத்தியையும் உயிர்கட்கு அவன் அருளுகின்றான்; அவ்வருட்செயல் திருக்கூத்தினால் நிகழ்கின்றது என்க. ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து ``ஆய், அணை`` என்னும் முதனிலைகள் `ஆய்ந்து` அணைந்து` என எச்சப்பொருள் தந்தன.
இதனால் திருக்கூத்து இரு சத்திகளால் இருவேறாகச் செய்யப் பட்டு, இருவகைப் பயனை விளைத்தல் கூறப்பட்டது.