ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி
உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று தேர்ந்துகொண் டேனே.

English Meaning:
Ajna Centre is Astral Temple of Lord

Straight within the fore-head
Between the eye-brows
Is the astral space vast;
Peer, peer within there
The luminous Mantra (Aum) will be;
The place where they in yearning sought Him
Is the place where He in yearning is;
That verily is the Holy Temple of Chittambara
And there did I firm sit.
Tamil Meaning:
நெற்றிக்குக் கீழே, இரு புருவங்கட்கு இடையே யுள்ள வெற்றிடம் தன்னை உற்று உற்றுப் பார்க்க, பார்க்குந்தோறும், பார்க்குந்தோறும் பார்ப்பவர்க்கு ஒளியை மிக மிக வீசுகின்ற ஓர் இல்லமாய் விளங்கும். `அந்த இல்லமே` சிவன் யாவரும் பற்றுதற்குரிய பற்றாய் இருக்குமிடம். அஃதாவது `ஞானாகாசம் என நான் திருவருளால் ஆராய்ந்து அடைந்தேன்.
Special Remark:
உற்று உற்றுப் பார்த்தலாவது, உளம் ஒருங்கித் தியானித்தல். எனவே, அது தியானித்திற்குரிய இடமாதல் பெறப் பட்டது. ஒளி - ஞானம். மந்திரம் - இருப்பிடம். மேல் துவாத சாந்தத்தை `அம்பலம்` என்றும், இருதயத்தை `அம்பலம்` என்றும் கூறி, இங்கும் புருவ நடுவை `அம்பலம்` என்றது என்னையெனின், அண்டத்தில் அம்பலங்கள் பலவாதல்போலப் பிண்டத்திலும் அம்பலங்கள் பலவாதல் பற்றியாம். இருதய அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்கு உரியது, புருவ நடு அம்பலம் வழிபட்டுத் தவம் பெறுதற்குரியது, புருவ நடு அம்பலம் தியானித்து ஞானம் பெறுதற்குரியது. துவாதசாந்த அம்பலம் அமைதியுற்று ஆனந்தம் எய்துதற்கு உரியது என்க. அண்டத்து அம்பலங்களும் வெள்ளி, பொன், மணி என வகைப்பட்டு நிற்றல் போலப் பிண்டத்து அம்பலங்களும் இவ்வாறு வகைப்பட்டு நிற்கும். ``மந்திரம்`` என்பதனை, `பஞ்சாக்கர மந்திரம்` என்பாரும் உளர். அஃது இவ்விடத்திற்கு இயைபில்லதாம் என்க. `இருந்த` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால் ஓர் அம்பலம் உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் அம்பலமாய் உள்ள அற்புதம் கூறப்பட்டது.