ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

ஒன்பதொ டொன்பதாம் உற்ற அசிபதத்(து)
அன்புறு கோணம் அசிபதத்(து) ஆடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடிட
அன்புறும் எந்தைநின்(று) ஆடலுற் றானே.

English Meaning:
He Danced in Asi Pada State

In the nine centres mystic within
The ninth state (Turiyatita) attained;
In the centre that is love
His twin feet in Asi-Pada danced;
And as the anguished Sakti within Him danced,
My loving Father together with Her in rapture danced.
Tamil Meaning:
தனித்தனி ஒன்பது, ஒன்பது பகுதிகளையுடை யனவும், `தத், துவம்` என்னும் இரு சொற்களால் குறிக்கப் படுவனவும் ஆகிய, `பதி, பசு` என்னும் இரண்டும் `அசி` என்னும் சொல்லில் இணையும்படியும், அதற்கு முன்னே பசு துன்பத்தைச் செய்கின்ற திரோதான சத்தியின் வசப்பட்டு எங்கும் பிறந்தும், வாழ்ந்தும் சுழலும் படியும் பசுக்களின் கருணையுடையவனாகிய எம்தந்தை சிவன் ஆடல் தொழிலைப் பொருந்தி நிற்கின்றான்.
Special Remark:
என்றது, `உயிர்கட்கு `பிறப்பு, வீடு` என்னும் இருநிலைகளையும் `தருதற்காக ஆடுகின்றான்` என்றபடி. வீடு சிறந்தமை பற்றி முற்கூறப்பட்டது. வீட்டைத் தருவது ஞான நடனம். பிறப்பைத் தருவது ஊன நடனம். `ஒன்பதும் ஒன்பதும் ஆம் கோணம்` எனவும், `இருபதத்து உற்ற கோணம்` எனவும் தனித்தனி இயைக்க. அவற்றுள் முன்னையது பதியையும், பசுவையும் தனித்தனி நவகோண சக்கரமாக உருவகம் செய்ததாம். பதியின் ஒன்பது பகுதிகள் நவந்தரு பேதம். பசுவின் ஒன்பது பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றில் ஒவ்வொன்றிலும் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மும்மூன்று உட்பிரிவுகளாம். அவையெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன. அன்புறுதல், ஒன்றையொன்று நேசித்தல். `அசி` பதம் சீவன் சிவன் ஆதலைக் குறிப்பது என்பதும் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டது. ``ஒன்பதொ டொன்பது`` என்பதில் உள்ள ஒடு எண் ஒடு. ``ஆடிட, ஆட`` என்னும் எச்சங்களும் எண்ணின்கண் வந்தன.
இதனால், உயிர்களின் பல நிலைகளும் நிகழ்தற்பொருட்டுச் சிவனும் பல நிலைகளில் நின்று ஆடுதல் கூறப்பட்டது.