
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதிஆம்
அரன்அங்கி தன்னில் அறையின் சங் காரம்
அரன்ஊற் றணைப்பில் அமருந்திரோ தாயி
அரன்அடி என்றும் அனுக்கிரகம் என்னே.
English Meaning:
Symbolism of Siva DanceHara`s drum is creation;
Hara`s hand gesturing protection is preservation;
Hara`s fire is dissolution;
Hara`s foot planted down is Obfuscation (Tirodhayi)
Hara`s foot, raised in dance, is Grace (Redemption) abiding.
Tamil Meaning:
கூத்தப் பிரானது திருவுருவில் தோன்றும் குறிப்பைக் கூறுமிடத்து, உடுக்கையால் ஒலியை உண்டாக்கல் படைத்தல் தொழிலை யும், நெருப்பை ஏந்தியிருத்தல் அழித்தல் தொழிலையும், மேல் எடாமல் உறுதியாக முயலகன்மேல் ஒருகாலை ஊன்றியிருத்தல் மறைத்தல் தொழிலையும், மற்றொரு காலை உயரத் தூக்கியிருத்தல் அருளல் தொழிலையும் இவ்வாறாக ஐந்தொழிலையும் உணர்த்தும் என்க.Special Remark:
மேல், ``திருந்த நற் `சீ` என்றுதறிய கையும்`` என்றதில் உணர்த்தப்பட்ட குறிப்பு முத்தர்கட்கான ஞான நடனக் குறிப்பு` எனவும், இது, பெத்தர்கட்கான `ஊன நடனக் குறிப்பு` எனவும் உணர்க. இதனையும்,``தோற்றம் துடியதனில்; தோயும் திதி அமைப்பில்;
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம்; - ஊற்றமா
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம்; முத்தி
நான்ற மலர்ப்பதத்தே; நாடு``3
என உண்மை விளக்க நூல் கூறுதல் காண்க. `ஊன்று` என்னும் முதனிலை வலித்தல் பெற்று, ஈற்றில் `அம்` ஏற்று, `ஊற்றம்` என வந்தது. ஊற்றமா - உறுதியாக. இஃது இம்மந்திரத்தில் ஆக்கம் இன்றி வந்தது. அணைத்தல் - (முயலகன் முதுகில்) சேர்த்தல். ``அரன்`` என்றது. இங்குக் கூத்தப் பெருமானையே. அப்பெயர் சொற்பொருட் பின்வருநிலையாய்ப் பின்னரும் வந்தது. ``ஊற்ற அணைப்பு`` என ஊன்றிய திருவடியைக் கூறினமையால், பின் வந்த ``அடி`` தூக்கிய திருவடியாயிற்று.
இது பெத்தர்க்கான குறிப்பாயினும், ஐந்தொழில் செய்தல் முதல்வனுக்கு இலக்கணமாதல் சிறப்பு நோக்கியும், இறுதியில் அருளல் அமைந்திருத்தலாலும் இதனையும் இங்கு நாயனார் கூறினார் என்க. ``அறையின்`` என்பதை முதலிற் கொள்க.
இதனால், கூத்தப் பெருமானது வேறொரு வகைக் கூத்தின் குறிப்பு உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage