ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

புளிக்கண் டவர்க்குப் புனல்ஊறு மாபோல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம்
துளிக்கும் அருட்கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும்
ஒளிக்குள்ஆ னந்தத் தமுதூறும் உள்ளத்தே.

English Meaning:
Rapturous Experience Flowing From Witnessing Holy Dance

At the sight of tamarind
Water in mouth wells up;
As like it,
Are all those who witness the Holy Dance;
They shed tears of joy;
They melt in love of Lord;
In their hearts,
Ambrosial bliss of Divine Light wells up.
Tamil Meaning:
புளியை நாவில் இட்டுச் சுவையாவிடினும் அதனைப் பார்த்தபோதே பார்த்தவர்கட்கு அதனைச் சுவைத்தாற் போல நாவில் நீர் ஊறுதல் அனைவரும் அறிந்தது. அதுபோல, கூத்தப் பெருமானது ஆனந்தக் கூத்தினைக் கண்டவர்கட்கு அக்கூத்தில் காணப்படும் குறிப்பின் பொருளைப் பெறாவிடினும் பெற்றுவிட்டது போன்ற இன்பம் உள்ளத்தில் ஊற்றெடுக்க உடலிலும் அதற்குரிய மெய்ப்பாடுகள் தோன்றும்.
Special Remark:
அம்மெய்ப்பாடுகள் கண்ணீரரும்புதல் ஒன்றை மட்டும் தோற்றுவாயாகச் சுட்டினார். மயிர் சிலிர்த்தல், உடல் கம்பித்தல், நாத்தழுதழுத்தல் முதலியன பிறவாம். களிக்கும் திருக்கூத்து - களித்தற்கு ஏதுவாய திருக்கூத்து. ``துளிக்கும் கண்ணீர் சேரா`` என்றது, `முன்பு அரும்பிப் பின்பு தாரையாய் ஒழுக` என்றபடி. `அக்கூத்து நெஞ்சை உருக்கும்` என்க. ஒளி - சிவம். அதனுள் ஆனந்தமாவது, அதில் தோய்ந்து பெறும் ஆனந்தம்.
`பெறத் தக்க பொருள்களைப் பெற்ற வழியே இன்பம் உண்டாதல் எங்ஙனம்` என்னும் ஐயத்தை உவம வாயிலாக நீக்கினார்.
``உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று``*
எனக் கூறிய அவ்வின்பத் தன்மை இவ்வின்பத்திற்கும் உண்டென்க. காமத்திற்கு உரியரல்லார்க்கு மேற்கூறிய காமத்திற்கு ஏதுவான காட்சி மகிழ்செய்யாதவாறு போல, இறையின்பத்திற்கு உரியர் அல்லார்க்குப் பொன்னம்பலக் கூத்துக்காட்சி இன்பம் செய்யாதாகலின், அவர், யாம், அக்கூத்தினைக் கண்டபொழுது எமக்கு அத்தகைய இன்பம் தோன்றவில்லையே ஏன்? என நாயனாரைக் கடாவலாகாமையறிக. ``புளிக் கண்டவர்க்கு`` என்பதில் சகர ஒற்று எதுகை நோக்கி விரிந்தது. புளி சுவைக்கப்பட்டு பொருளாகலின், `நாவில்` என்பது கூற வேண்டாவாயிற்று. `சோர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். ``ஆனந்தக்கூத்து`` என்பதில் அது, அல்வழிக்கண் வந்த சாரியை.
இதனால், திருக்கூத்துக் கண்ட அளவிலே ஆனந்தம் விளைக்கும் அற்புதம் கூறப்பட்டது.