ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவ அந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவ அந்தமும்
நாதப் பிரம சிவநட மாமே.

English Meaning:
Siva Natana

Nadanta that is end of Nada, (Principle of Sound)
Bodhanta that is end of Bodha (Jnana)
Vedanta that is end of Vedas
Sivananda that is Bliss of Siva,
Sadasivananda that is without end,
In all these, He dances the Siva Natana
He that is Nada Brahmam (Lord within the Sound-Principle).
Tamil Meaning:
உயிர் தத்துவங்கள் அனைத்தையும் `தான் அல்ல` என்று கண்டு கழித்துத் தன்னை அவற்றிற்கு வேறான சித்துப் பொருளாக உணர்தலும், பின்பு, `தான், அறிவித்தால் அறியும் தூல சித்தாவதல்லது, தானே அறியும் சூக்கும சித்தன்று` எனத் தனது உண்மையை உணர்ந்து, அதனானே, `தானே அறிந்தும், உயிர்கட்கு அறிவித்தும் நிற்கும் சூக்கும சித்துத் தலைவனாம் சிவன்` என அறிதலும், இவ்வறிவு வேதாகமங்களாகிய அபர ஞானங்களாய் இல்லாது, அவற்றைக் கடந்த அனுபவமாம் பரஞானமாகப் பெறுதலும் ஆகிய இவையெல்லாம் தனக்கு ஒரு மூலம் இல்லாது தானே மூலமாய் நிற்கும் சதாசிவ மூர்த்திக்கு மேலே நாதமாய் நின்று `நாதப்பிரமம்` எனப்படுகின்ற ஆதி சிவனது நடனத்தின் பயனேயாகும்.
Special Remark:
``அந்தம்`` என்பன கடந்த நிலையைக் குறித்தன. தாது - மூலம். ஐந்தொழில்களில் இறுதியான அருளலைச் செய்வோன் சதா சிவன் ஆதலை நினைக. ``மெய்ச் சிவம்`` என்பதில் சிவம், சிவத்தைத் தரும் சிவாகமம். சத்தப் பிரம வாதிகள் சடமாகிய நாதத்தையே `நாதப் பிரமம்` என்பர். அது பொருந்தாது; நாதத்தை அதிட்டித்து நிற்கும் சிவனே நாதப்பிரமம் என்பார் `நாதப் பிரம சிவன்` என்றார். இந்தச் சிவன் அநாதி சிவனாகிய பரம் சிவத்தினின்றும் தோன்றிய ஆதி சிவன் ஆதலையறிக. நடத்தின் பயனை, ``நடம்`` என உபசரித்தார்.
இதனால், சுத்தாவத்தை பராவத்தைகள் யாவும் திருக்கூத்தின் விளைவாதல் கூறப்பட்டது. இவ் அவத்தைகள் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.