ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

திண்டாடி வீழ்கை சிவானந்த மாவது
உண்டார்க்(கு) உண(வு) உண்டால் உன்மத்தம் சித்திக்கும்
கொண்டாடும் மன்றுள் குனிக்கும் திருக்கூத்துக்
கண்டார் வருங்குணம் கேட்டார்க்கும் ஒக்குமே.

English Meaning:
So too: They Who Hear of It

They stagger, their sense lost,
Drunk of Sivananda Bliss;
They who still retain their senses,
Frenzied become;
Thus are they,
Who the Divine Dance witnessed,
In the Holy Arena praised by all;
Even those who hear of it
Are like those who witness it;
—All rapture is theirs too.
Tamil Meaning:
சிவானந்தத்தை அடைந்தவர்கட்கு உளவாகும் மெய்ப்பாடுகள் உடல் நிற்கலாற்றாது தள்ளாடி வீழ்தல் முதலியன வாம். (இந்நிலை எய்தினாரை, `ஆவேசம் வரப்பெற்றவர்` என்பார்.) இனிய உணவுகளால் விளையும் மகிழ்ச்சி அவற்றை உண்டபின்பே உண்டவர்க்கு உளவாகும். ஆயினும் யாவராலும் புகழப்பெறும் திரு வம்பலத்தில் சிவன் செய்யும் கூத்துக் கண்டவுடனே கண்டவர்க்குப் பெருமகிழ்வை உண்டாக்கும். (எனவே, திண்டாடி வீழ்தல் முதலியன கண்டார்க்கும் உண்டாவனவாம்.) இனி அதனைக் கண்டார்க்கே யன்றிக் கண்டவர் அக்கூத்தின் இயல்பைச் சொல்ல, அதனைக் கேட்டவர்க்கும் அத்தகைய மகிழ்வை அக்கூத்து உண்டாக்கும்.
Special Remark:
`திண்டாடுதல்` என்பது நிலையாகாமல் தளர்ந்து வீழ்தலைக் குறிக்கும் நாட்டுப்புற வழக்கு. ``சிவானந்தம்`` என்பது அதனால் உண்டாகும் மெய்ப்பாட்டினைக் குறித்த ஆகுபெயர். பின் மூன்று அடிகள் வேற்றுமையணி பெற்றன. `இன்பம் பயத்தலால் இனிய உணவும், திருக்கூத்தும் ஒக்குமாயினும், இனிய உணவினும், திருக்கூத்துத் தனித்ததொரு சிறப்புடையது` என்பதாம். மேற்காட்டிய, ``உண்டார்கண் அல்லது`` என்னும் திருக்குறளும் அவ்வணியை உடையதே - `மகிழ்ச்சி கண்டவர்க்கு மட்டுமன்று; கேட்டவர்க்கும் உளதாம்` என்பதை இம்மந்திரம் கூறிற்று. `கண்டார்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது. ``குணம்`` என்றது நிகழ்ச்சிகளை.
இதனால், மேற்கூறிய அற்புதத்தினும் அற்புதம் ஒன்று கூறப்பட்டது.