ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே.

English Meaning:
In Dance Siva Blends

The Dancer blends in Sakti of charming bracelets,
The Dancer blends in blemishless Bliss,
The Dancer blends in blemishless Jnana,
The Dancer and His Consort in Dance Blend.
Tamil Meaning:
கூத்தப் பெருமான், தான் மட்டும் தனியே நின்று ஆடாமல், உமை ஒருபால் நிற்கக் கொண்டு, அவள் கானவே ஆடுதல் வெளிப்படை. அதனாலேதான் அவனது கூத்து ஆனந்தமயமாயும், ஞானமயமாயும் உள்ளது. ஒரு கூத்திலே இருவர் பங்கும் உள்ளனவேயன்றி, இருவரும் இருகூத்து இயற்றிலர்.
Special Remark:
`ஞானமும், ஆனந்தமும் இறைவனுக்குக் குணங்கள் ஆதலின் அவை அவனது சத்தியேயாம்` என்பதும், `சத்தியின்றிப் பொருள் இல்லை ஆதலால், அவள் இன்றி அவன் ஆடுதல் இல்லை` என்பதும், `பொருளும், சத்தியும் வேறு வேறு ஆகாமையின், இருவரும் ஒரு கூத்தினையே உடையர்` என்பதும் கூறியவாறு. `வேறொரு கூத்தை ஆடியவன் காளி` என்க.
``கூத்ததின்மேலே`` என்பதற்கு, `ஒரு கூத்ததின்மேலே` என உரைக்க. அது பகுதிப் பொருள் விகுதி. `மேலே உள்ளனர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. கோது - துன்பமும், அறியாமையும். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், ஒரு நடனத்தை இருவர் இயற்றுதலும், அதனால் பிறவற்றில் பெறப்படாத பயன் விளைதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.