ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.

English Meaning:
Dance for Jiva`s Redemption

My Lord and His Sakti
That His Half took
Stood dancing;
That I witnessed;
For the countless Jivas
That are veiled by Maya;
As Redemption He stands,
Dancing, dancing eternal.
Tamil Meaning:
`எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூடைபோல ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்.
Special Remark:
``சத்தி`` என்றதனால், `சிவன்` என்பதும், ``எந்தை`` என்றதனால், `எம்தாய்` என்பதும் பெறப்பட்டன. `கருதல் அளவையால்` என்பது, ஆற்றலால் வந்தது. கருதலளவையால் அதனை யறிந்தவாறாவது,
``சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும், பெண்ணும், உயர்குண குணியுமாகி``9
நிற்றலைக் கொண்டு அறிவதாம்.
``இடம்`` என்றது உடம்பின் இடப்பாகத்தை யாதலின், `ஒருவரே இருவராய் நிற்றல்` பெறப்பட்டது. ``ஓர் உடம்பு இருவராகி``8 என அப்பர் அருளிச்செய்தமை காண்க. `இவர்கள் நடனம் ஆடுதல் உயிர்களின் பொருட்டே` என்பதை ஞான சம்பந்தரும்,
``ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் ... ... ... ... ... ...
நாடும் திறந்தார்க்கு அருளல்லது நாட்டலாமே``9
என அருளிச் செய்தமை காண்க.
இதனால், ஒருவரே இருவராய் நின்று ஆடுதலும் அவ் விடத்து, அடங்கலும் தாமாய் நின்று ஆடுதலும், தம் பொருட்டன்றிப் பிறர் பொருட்டாகவே ஆடுதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.