
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து
பதிகங்கள்

இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும்
நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன்
படங்கொண்டு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம்
அடங்கலும் தாமாய்நின் றாடுகின் றாரே.
English Meaning:
Dance for Jiva`s RedemptionMy Lord and His Sakti
That His Half took
Stood dancing;
That I witnessed;
For the countless Jivas
That are veiled by Maya;
As Redemption He stands,
Dancing, dancing eternal.
Tamil Meaning:
`எம் தந்தையாகிய சிவனது இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்ட, எம் தாயாகிய சத்தியும் அவளுக்குத் தனது இடப் பாகத்தைத் தந்த சிவனும் என ஒருவரே இருவராய் நின்று கூத்தியற்று கின்றார்கள்` என்பதை நானும் கருதலளவையால் உணர்ந்து கொண்டேன். ஆகவே, துணியால் பொதியப்பட்ட மூடைபோல ஆணவ மலத்தால் மறைக்கப் பட்டுள்ள அனைத்துயிர்களின் பொருட்டாகவே அவ்விருவரும், மாயா காரியங்கள் அனைத்திலும் நிறைந்து நின்று, அவைகளை இயக்கித் தாம் ஆடுகின்றனர்` எனப் பிறர்க்கும் உணர்த்துகின்றேன்.Special Remark:
``சத்தி`` என்றதனால், `சிவன்` என்பதும், ``எந்தை`` என்றதனால், `எம்தாய்` என்பதும் பெறப்பட்டன. `கருதல் அளவையால்` என்பது, ஆற்றலால் வந்தது. கருதலளவையால் அதனை யறிந்தவாறாவது,``சத்தியும் சிவமும் ஆய தன்மை இவ்வுலக மெல்லாம்
ஒத்தொவ்வா ஆணும், பெண்ணும், உயர்குண குணியுமாகி``9
நிற்றலைக் கொண்டு அறிவதாம்.
``இடம்`` என்றது உடம்பின் இடப்பாகத்தை யாதலின், `ஒருவரே இருவராய் நிற்றல்` பெறப்பட்டது. ``ஓர் உடம்பு இருவராகி``8 என அப்பர் அருளிச்செய்தமை காண்க. `இவர்கள் நடனம் ஆடுதல் உயிர்களின் பொருட்டே` என்பதை ஞான சம்பந்தரும்,
``ஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்
பாடும் எனவும் ... ... ... ... ... ...
நாடும் திறந்தார்க்கு அருளல்லது நாட்டலாமே``9
என அருளிச் செய்தமை காண்க.
இதனால், ஒருவரே இருவராய் நின்று ஆடுதலும் அவ் விடத்து, அடங்கலும் தாமாய் நின்று ஆடுதலும், தம் பொருட்டன்றிப் பிறர் பொருட்டாகவே ஆடுதலும் ஆகிய அற்புதங்கள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage