ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

நீடும் சிரசிடைப் பன்னிரண் டங்குலம்
ஓடும் உயிர்எழுந் தோங்கி உதித்திட
நாடுமின் நாதாந்த நம்பெரு மான்உகந்(து)
ஆடும் இடம்திரு அம்பலத் தானே.

English Meaning:
Nadanta Dance in Prana Source

From within the head
In twelve finger-measure
The Prana breath rises high,
That highway you seek;
That the Place where
Our Lord of Nadanta dances;
That verily is the Holy Temple.
Tamil Meaning:
உள்ளே புகுந்து, வெளியே ஓடும் இயல்புடைய பிராணன் மூலாதாரத்திலினின்றும் எழுந்து சுழுமுனை வழியாக மேலே செல்லுங்கால், புருவ நடுவையும் கடந்து உச்சியை அடைந்து, அதற்கு மேலேயும் பன்னிரண்டங்குலம் சென்றால் பின்பு கிடைப்பது மேல் நிலைத் தத்துவமாகிய நாதத்தையும் கடந்து நிற்கின்ற நம் பெருமானாகிய சிவன் மிகவும் விரும்பி ஆடும் இடமாகிய திரு வம்பலமே. அதனை நீங்கள் உணருங்கள்.
Special Remark:
``நாடுமின்`` என எடுத்தோதியது, பொற்பதிக் கூத்து, பொற்றிலைக் கூத்து ஆகியவற்றில் காணப்படும் அம்பலங்களை இம்மீதான அம்பலமாக உணர்ந்து வணங்குதல் சிறப்பு` என்பது உணத்துதற் பொருட்டாம்.
ஆறு ஆதாரங்களில் மேல் உள்ளதாகிய ஆஞ்ஞைக்கு அப்பால் உச்சி வரை ஏழாந்தானம். அதற்கு மேல் பன்னிரண்டங்குலம் நிராதாரம்; அதைக் கடந்த பெருவெளி மீதானம். அதுவே பரவெளி. `துவாதசாந்தம்` என்று சொல்லப்படுவது.
பிராணன் ஏழாம் தானத்திற்கு அப்பால் செல்லுதல் இல்லை. வலிந்து செலுத்தினால் பின் திரும்பாதாக, உடம்பு வீழ்ந்துவிடும். ஆயினும் பிராசாத கலைகளால் பிராணன் நிராதாரத்தளவு செல் வதாகப் பாவித்து நிற்றல் பற்றி ``பன்னிரண்டங்குலம் உதித்திட`` என்றார். உதத்தல், இங்கு, செல்லுதல். `உதித்திட அப்பால் அம்பலந் தான்` என ஒருசொல் வருவித்து முடிக்க. தான் என்பது தேற்றப் பொருள் தந்து நின்றது.
``ஓடும் உயிரெழுந்து ஓங்கி`` என்பதை முதலிலும், ``நாடுமின்`` என்பதை ஈற்றிலும் வைத்துரைக்க.
இதனால், புற அம்பலங்கள் அக அம்பலங்களாகச் சிறந்து நிற்கும் அற்புதம் கூறப்பட்டது.