ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

புரிந்தவன் ஆடில் புவனங்கள் ஆடும்
தெரிந்தவன் ஆடு மளவெங்கள் சிந்தை
பரிந்தவன் ஆடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற வாறே.

English Meaning:
When Creator Dances All Creation Dances

When the Creator dances
The Worlds He created dances;
To the measure He dances in our knowledge,
Our thoughts too dance;
When He in heart endearing dances,
The elements several too dance;
Flaming as Divine Five He dances,
That we witnessed in rapture surpassing.
Tamil Meaning:
அனைத்தையும் படைத்தவனாகிய சிவன் அடி பெயர்த்து ஆடினால், அவனால் படைக்கப்பட்ட அகலிடங்கள் அனைத்தும் தாமாகவே ஆடும். (இயங்கும் `அவன் ஆடாவிடில் அவையும் ஆடா; இயங்கா` என்பது கருத்து.) இதை அறிந்த சிவன் அவை ஆடும் பொருட்டுத் தான் ஆடுமளவும் எங்கள் அறிவுகள் அறிதலைச் செய்யும். (`அவன்` ஆடாவிடில் எங்கள் அறிவுகளும் அறிதலைச் செய்யா` என்பது கருத்து.) இது பற்றி அவன் கருணை கூர்ந்து எங்கும், எப்பொழுதும் ஆடுகின்றான். அப்பொழுது அவனது சுற்றமாகிய பல பூதங்களும் களிப்பினால் ஆடுகின்றான். நாங்கள் இன்பம் அடைந்ததும் அவன் சோதியாய் விளங்கி நின்று ஆடுதலைக் கண்டேயாம்.
Special Remark:
``புரிந்தவன், தெரிந்தவன்`` என்பன வினை யாலணையும் பெயர்கள். `அவன் புரிந்து ஆடில்` எனவும், `அவன் எரிந்து ஆடல்` எனவும் மாற்றி வைத்துரைக்க. `சிந்தையும்` ஆடும் என, இறந்தது தழுவிய எச்ச உம்மையும் அதனை முடிக்கும் சொல்லும் வருவிக்க. எரிதல் - ஒளி வீசுதல். `யாம் இன்புற்றவாறு ஆடல் கண்டு` என எடுத்து முடிக்க. ``இன்புற்றவாறு`` என்பதிலும் இறந்தது தழுவிய எச்ச உம்மை தொகுத்தலாயிற்று.
இதனால் திருக்கூத்தினால் அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் அனைத்தும் செயற்படும் அற்புதம் கூறப்பட்டது.