ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

அங்கி தமருகம் அக்கமாலை பாசம்
அங்குசம் சூலம் கபால முடன் ஞானம்
தங்கு பயமுன் தருநீல மும்முடன்
மங்கையோர் பாகமாய் மாநடம் ஆடுமே.

English Meaning:
He Dances With Sakti

With fire and drum,
With Rudraksha garland and noose cord,
With elephant`s goad, trident and skull,
With frightening blue throat where Jnana is,
With Sakti for His inseparate partner,
He dances the Dance Mighty.
Tamil Meaning:
சிவபெருமான் திருக்கூத்து நிகழ்த்துங்கால், நான்கு கைகளோடே நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துதலும் உண்டு. எட்டுக் கைகளோடு நிகழ்த்துங்கால் அவற்றில்,) தீயகல், உடுக்கை, உருத்திராக்க வடம், பாசம், அங்குசம், சூலம், பிரம கபாலம் என்பவற்றுடன் ஞானத்தின் பயனாகிய அஞ்ஞானத்தை நீக்குதலைக் குறிக்கும் நீல மலரையும் ஏந்தி, உமையம்மை ஒருபால் நிற்க ஆடுவான்.
Special Remark:
நீல மலர் கரிய நிறத்தை உடையதாய் இரவில் முகிழ்த் திருந்து, கதிரவன் தோன்ற மலர்வது ஆதலின், அஃது ஆணவத்தில் அறியாமை எய்திக்கிடந்து, திருவருள் தோன்ற அது நீங்கி அறிவு நிகழ்தலைக் குறிப்பால் உணர்த்தும். இதனை நாயனார் எடுத் தோதவே, ஏனையவை பற்றிய குறிப்புக்களும் உணரப்படும். அவை நெருப்பு அழித்தல் தொழிலையும், வினையை எரித்தல் தொழிலையும், உடுக்கை ஒலியைப் பிறப்பித்துப் படைத்தல் தொழிலையும், மாயையை உதறித் தள்ளுதலையும், அக்கமாலை ஞானோபதேசம் செய்தலாகிய அருளல் தொழிலையும், குலம் இச்சா ஞானக்கிரியா சத்திகளுடன் கூடி அனைத்தையும் நடத்துதலையும், பிரம கபாலம் தனது நித்தியத் தன்மையையும் குறிக்கும். தேவி திருவருளைக் குறித்தல் வெளிப்படை. பயம் - பயன். `சிவன்` என்னும் தோன்றா எழுவாய் வருவித்துக்கொள்க. கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் கூத்துக்கோல வருணிப்பில்,
``ஆறறி யந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்து
கூறாமற் குறித்ததன்மேற் செல்லுங் கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய், கேளினி``
என எட்டுக் கையே கூறப்பட்டது.
இதனால், ஒருவகை நடனக்கோலம் வகுத்துணர்த்தப்பட்டது.