ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

கூட நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர் தாஎன்னும் நாமத்துத்
தேட நின்றான்திக ழும்சுடர் மூன்றொளி
ஆட நின்றான் என்னை ஆட்கொண்ட வாறே.

English Meaning:
Dance in the Three Lights

As One Supreme He stood in times of yore,
Redeeming the Celestials countless,
He earned the name of Lord (Vikirtha)
He danced in the luminous Lights Three,
He accepted me in His Grace.
Tamil Meaning:
`தேவர் என்பார் அனைவரும் தனது முன்னிலையில் ஒருங்கு கூடி வணங்க இருப்பவனும் அவர் அனைவருமே அழிந்து இல்லையாகிய காலத்திலும் தான் அழியாது ஒருவனாய்த் தனித்திருப் பவனும், உள்ள காலத்திலும் உயிர் வருக்கத்துட் பட்டார் யாவரும் `எம்மில் வேறாம் தன்மையுடையவனே`, (தலைவனே) என அந்தப் பெயரைச் சொல்லித் தேட நிற்பவனும் தனது முக்கண்கள் சுழலுதலால், உலகத்தார் முன் விளங்குகின்ற, `ஞாயிறு, திங்கள், தீ` என்னும் முச்சுடர்களும் சுழலும் படி ஆடகின்றவனும் ஆகிய அவன் என்னை ஆட்கொண்டவாறு வியப்பிற்குரியது.
Special Remark:
கூடுதல், தன் பயனைத் தோற்றுகின்றது. ``தேவர்கள்`` என்பதை, ``கூட`` என்பதனோடும் கூட்டுக. `வீடவும்` என்னும் சிற்பபும்மை தொகுத்தலாயிற்று. விகிர்தன் - வேறுபட்டவன். மூன்றொளிகள் ஆடுதல் கூறினமையால் அவன் ஆடுதல் பெறப்பட்டது. `வியப்பிற்குரியது` என்பது சொல்லெச்சம்.
இதனால் ஆடல் வல்லானது அற்புத நிலை கூறப்பட்டது.