ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட
அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடன்ஆட
இன்புறும் ஏழினும் ஏழ் ஐம்பத் தாறாட
அன்பனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே.

English Meaning:
Dance of Divine Bliss

The nine1 danced,
The sixteen2 danced,
The loving Faiths six3 danced,
The seven4 melodies danced;
The twenty and eight5 rhythmic beats danced;
The Love (Sakti) too danced;
He danced the Dance of Divine Bliss.
Tamil Meaning:
சிவவேதங்கள் ஒன்பதும், பிராசாத கலைகள் பதினாறும், சமயங்கள் ஆறும் ஒருங்கு ஆடும்படியும், உயிர்கள் இன் புறும் இடமாகிய ஏழ்அண்டத்துள் சிறப்பாக நிலவுலகில் ஏழு தீவுகளும், அவற்றினும் சிறப்பிற் சிறப்பாக பரத கண்டத்து ஐம்பத்தாறு நாடுகளும் ஆடும்படியும் உயிர்கள் மாட்டு அருள் உடையோனாகிய சிவன் ஆனந்தத்தை விளைக்கும் திருக்கூத்தைத் தில்லையில் ஆடுகின்றான்.
Special Remark:
நில உலகத்தைச் சிறப்பாகக் கூறினமையால், கூத்து முன் அதிகாரத்திற்போந்த தில்லைக் கூத்தாயிற்று. சிவ பேதங்கள் ஒன்பதாவன, நவந்தரு பேதங்கள். அவை ஆடுதலாவன, தாம் கருதி யவற்றை நிகழ்த்துதல், `பிராசாத கலைகள்` என்றது அவற்றின் அதி தேவர்களையும் `சமயங்கள்` என்றது அவற்றை மேற்கொண்டவர்களை -யுமாம். ஒன்பது முதலிய மூன்றும் ஞான வாயிலாதல் பற்றி அவற்றை முன்னர்க் கூறினார். ``அன்பனும்`` என்னும் உம்மை, சிறப்பு.
இதனால், தில்லையில் உள்ள ஒருவன் ஆட, அனைத்தும் ஆடுதலாகிய அற்புதம் கூறப்பட்டது.