ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 15. அற்புதக் கூத்து

பதிகங்கள்

Photo

ஆதி நடம்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடம்செய்கை ஆரும் அறிந்திலர்
ஆதி நடம்ஆடல் ஆரும் அறிந்தபின்
ஆதி நடம்ஆடல் ஆம்அருட் சத்தியே.

English Meaning:
Primal Dance

``The Primal Dance He danced``
Thus say the holy ones;
None saw Him dance
That Primal Dance of yore;
When that Primal Dance they witness,
They dance indeed in the Grace
Of that Primal Sakti.
Tamil Meaning:
எப்பொருட்கும் முதல்வனாகிய சிவன் கூத்தனாய் நிற்றலைக்கண்டு, அதன் உண்மையை அறியும் அறிவு இல்லாதவர்கள், அக்கூத்தினை அவன் எவையோ சில பயன்களைப் பெற வேண்டி ஆடுகின்றான்` எனப் பிதற்றுவார்கள். (`எப்பொருட்கும் முதல்வ னாகியவனுக்குப் பிறர்பால் பெற வேண்டியது யாதுளது` என்பது கருத்து.) அவன் நடம் செய்தபின் உண்மை யாவராலும் அறிதற்கு அரிதேயாம். யாரேனும் அவ்வுண்மையை அரிவார் களாயின், `அவனுக்கு இயல்பாய் உள்ள கருணையின் விளைவே அவனது கூத்து` என்பதே அவ்வுண்மையாய் முடியும்.
Special Remark:
`ஆராயினும்` என்பது, `ஆரும்` எனத் தொகுத்தல் பெற்று நின்றது. `அறிந்தால்` என்பது, ``அறிந்த பின்`` எனத்திரிந்து நின்றது. குணத்தை, ``சத்தி`` என்றார். `அருட் சத்தி ஆம்` என முன்னே கூட்டி முடிக்க. செய்கையின் உண்மையை, ``செய்கை`` என்றும் சத்தியின் விளைவ ``சத்தி`` என்றும் உபசரித்தார். இம்மந்திரம் சொற்பொருட் பின்வருநிலையணி பெற்றது.
இதனால், சிவனது திருக்கூத்துச் சிறிதும் தன்பொருட்டாகாது, பிறர் பொருட்டேயாகின்ற அற்புதம் கூறப்பட்டது.