ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கடவுள் வாழ்த்து

    ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
    நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
    வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
    சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.
  • 10. மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
    ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
    செழுஞ்சுடர் மூன்றொளி யாகிய தேவன்
    கழிந்த பெருமையைக் காட்டகி லானே.
  • 11. எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
    செழுந்தண் நியமங்கள் செய்மின் என் றண்ணல்
    கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
    அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.
  • 12. நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
    புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
    தந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
    சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.
  • 13. செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
    அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
    தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
    ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.
  • 14. இருந்தஅக் காரணம் கேள்இந் திரனே
    பொருந்திய செல்வப் புவனா பதியாம்
    அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
    பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.
  • 15. சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
    மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
    இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
    உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.
  • 16. மாலாங்க னேஇங் கியான்வந்த காரணம்
    நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு
    மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
    சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.  
  • 17. நேரிழை யாவாள் நிரதி சயானந்தப்
    பேருடை யாள்என் பிறப்பறுத் தாண்டவள்
    சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
    சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.
  • 18. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
    சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
    சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
    சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.
  • 19. இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி
    இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
    இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
    இருந்தேன்என் நந்தி இணையடிக் கீழே.
  • 2. நுதலிய பொருள்
    போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
    நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
    மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
    கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.
  • 20. பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
    முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
    என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
    தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.
  • 21. ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
    ஊனமில் ஒன்பது கோடி யுகந்தன்னுள்
    ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து
    நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
  • 22. செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்
    வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்
    பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்
    ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.
  • 23. சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
    உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
    ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
    அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.
  • 24. நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
    வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
    ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
    தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
  • 25. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
    சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
    மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
    உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.
  • 26. அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
    எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
    தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
    பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.
  • 27. ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
    மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
    ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
    வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.
  • 28. விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
    அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
    துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
    வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.
  • 29. நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
    நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
    நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
    நந்தி அருளாலே நான்இருந் தேனே.
  • 3. நூற் சிறப்பு
    ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
    நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
    பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
    புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.
  • 30. இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
    அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
    அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
    உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.
  • 31. பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
    இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
    உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
    இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.
  • 32. ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
    ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
    பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
    வேர்அறி யாமை விளம்புகின் றேனே.
  • 33. பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
    ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
    நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
    தேடவல் லார்நெறி தேடகில் லேனே.
  • 34. மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
    இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
    பின்னை உலகம் படைத்த பிரமனும்
    உன்னும் அவனை உணரலும் ஆமே.
  • 35. தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
    முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
    ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
    பத்திமை யால்இப் பயன்அறி யாரே.
  • 36. மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
    ஞாலம் அறியவே நந்தி அருளது
    காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
    ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே.
  • 37. வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
    முத்தி முடிவிது மூவா யிரத்திலே
    புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
    வைத்த சிறப்புத் தரும்இவை தானே.
  • 38. வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
    முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
    தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
    சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.
  • 39. கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
    நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
    புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
    நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.
  • 4. அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
    புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
    பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
    இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
  • 5. பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
    தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
    தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
    நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.
  • 6. நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரமர்
    என்றிவர் என்னோ டெண்மரு மாமே.
  • 7. நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றேன்
    நந்தி அருளாலே மூலனை நாடினேன்
    நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்
    நந்தி வழிகாட்ட நான்இருந் தேனே.
  • 8. மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
    டிந்த எழுவரும் என்வழி யாமே.
  • 9. நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
    நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
    நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
    நால்வரும் தேவராய் நாதரா னார்களே.