ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

English Meaning:
Night And Day Yearn For Him
Unceasing, I prattle daily Nandi`s name.
By day praise Him in thought and by night as well,
Daily I yearn for my Master, the Light-hued,
The Lord of the uncreated Radiant Flame.
Tamil Meaning:
இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.
Special Remark:
விடாது சொல்லுதலை, `பிதற்றுதல்` என்றார். `நந்தி பேர் தன்னை` என மாற்றுக. நெஞ்சத்து இயற்றுதல், நினைத்தல். `உஞற்றுவன்` என்பது, `உயற்றுவன்` என நின்றது. `முயற்றுவன்` எனவும் பாடம் ஓதுவர். `இயல்பாகத் திகழ்கின்ற சோதி` என்க. இறைவன், ஆகுபெயர். ``ஆம்`` என்றதற்கு எழுவாய் வருவிக்கப் பட்டது.
பதினெட்டுத் திருமந்திரங்களால் தம் வரலாறும், நூல் வரலாறும் கூறிய நாயனார், நான்கு திருமந்திரங்களால் அவையடக்கம் கூறுகின்றார். நாயனார் அவையடக்கம் கூறியது, இறைவனது பெருமையை மாணாக்கர் உணர்தற்பொருட்டு என்க.