ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

நால்வரும் நாலு திசைக்கொன்றும் நாதர்கள்
நால்வரும் நானா விதப்பொருள் கைக்கொண்டு
நால்வரும் நான்பெற்ற தெல்லாம் பெறுகென
நால்வரும் தேவராய் நாதரா னார்களே.

English Meaning:
Four Nandis
The Four, each in his corner, as Master ruled,
The Four, each his diverse spiritual treasure held
Each gave to the world whatever they had attained,
And thus, the four Immortals and Masters became.
Tamil Meaning:
நந்தி பெருமானுக்கு மாணாக்கராகிய எண்மருள், நந்திகள் எனப்பட்ட நால்வரும் எல்லா உலகங்கட்கும் பொருந்திய ஆசிரியர்களாய், அறம் முதலாக நால்வகைப்பட்டுப் பற்பல வகையாக விரிந்த உறுதிப்பொருள் அனைத்தையும் உணர்ந்து, நான் பெற்ற பேற்றினை உலகம் பெறுவதாக என்னும் பேரருள் உடையராய், அதனால் சிவகணத்துள்ளே ஆசிரியராயினர்.
Special Remark:
அதனால், அவர் இந்நிலவுலகத்திற்கு வந்திலர் என்ற வாறு. அந்நால்வருள் சனற்குமாரர்க்குச் சத்தியஞான தரிசினிகளும், அவர்க்குப் பரஞ்சோதி மாமுனிகளும் மாணாக்கராக, பரஞ்சோதி மாமுனிகள் வான்வழிச் செலவின் இடையே தமிழ்நாட்டில் திரு வெண்ணெய்நல்லூரில் கருவிலே திருவுடையவராய் (சாமுசித் தராய்)த் தோன்றி, சுவேதவனப்பெருமாள் என்னும் பிள்ளைத் திருப் பெயர் உடையாராய் இருந்தவர்க்குச் சிவஞானத்தை உபதேசித்து, மெய் கண்டார் எனத் தீக்கைத் திருப்பெயரும் இட்டுச் செல்ல, அவரது மரபு இன்றும் தமிழ் நாட்டில் நின்று நிலவுதல் அனைவராலும் அறியப் பட்டது. நான் என்றது, பன்மை ஒருமை மயக்கம். மெய்கண்டாரது தோற்றம் நாயனார்க்குப் பன்னூறாண்டுகட்குப் பிற்பட்டது என்பதைப் பலர் அறிவர்.