ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேன்நின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேஉணர்ந் தோமால்.

English Meaning:
Mystic Truths Flashed
Sadasiva, Tattva, the Muthamil and Vedas
Them I sought not while here I fasted;
I held them not in the heart; but soon my mind turned,
And indifference abandoning, realised them all
Tamil Meaning:
இறப்புத் தோன்றாதவனாய் இருந்து வாழ்ந்த அக் காலம் முழுதும் உலகத்தில் விருப்பம் தோன்றாது மனஒடுக்கம் உடையவனாயே இருந்தேன். அவ்வாறிருக்கும் பொழுது, சிவபெரு மானது ஐந்தொழில்நிலை, பொருட்பெற்றி, தமிழ்மொழி, வேதம் என்னும் இவைகளைப் புறக்கணியாது விருப்பத்துடன் கற்று உணர்ந்தேன்.
Special Remark:
கீழுள்ள மகேசுரர் முதலியவர்க்கும் தலைவர் சதா சிவரேயாதலின், அவரே ஐந்தொழிற்கும் தலைவராதல் வெளிப்படை. அதனால், ஐந்தொழில் நிலையை, `சதாசிவம்` என்ற ஒன்றினாலே குறித்தார். இனி அதனை `உபலக்கணம்` என்றலும் ஆம். `முத்தமிழ்` என்ற இதனால், கயிலைத் தாழ்வரையிடத்தும் அக்காலத்தில் தமிழ் போற்றிக் கற்கப்பட்டது என்பது தெளிவாகும். அதனாலன்றோ பிற் காலத்திற் சேரமான் பெருமாள் நாயனார் தமது `திருக்கயிலாய உலா` என்னும் ஞானத் தமிழ்ப்பாடலைத் திருக்கயிலையில் யாவரும் கேட்க அரங்கேற்றினார்! இதனால், நாயனார் தாம் பலகலை வல்லுநராயி னமையைக் குறித்தவாறு காண்க. இவற்றையெல்லாம் இவர் நந்தி பெருமானது அருள்பெற்ற பின்னர் அதனையே துணையாகப் பற்றி நன்குணர்ந்தார் என அறிக. எனவே, இறைவன் திருவருள் உலகர் உய்தற்பொருட்டு இவரை இந்நிலையினராக்கியது என்பதும் உணரற் பாற்று. `மிருதம், இதம்` என்பன செய்யுள் நோக்கி; `மிதா, இதா` என நின்றன. சனித்தல் - தோன்றுதல். உதா சனித்தல் - புறக்கணித்தல். இரண்டாம் அடியில் `நிதாசனி` என்பதும் பாடம்.