ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய்
தந்தி மதிபுனை அரனடி நாள்தொறுஞ்
சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

English Meaning:
HISTORY OF TIRUMULAR
In Meekness And Prayer
High on my bowed head Nandi`s sacred Pair of Feet I bore,
Intoning loud His Name in my heart`s deepest core,
Daily musing on Hara wearing high the crescent moon,
Thus I ventured the Agamas to compose.
Tamil Meaning:
என் ஆசிரியராகிய நந்தி பெருமானது இரு திருவடிகளையும் என் சென்னியிலும், சிந்தையிலும் கொண்டு, வாயினாலும் துதித்து, அவ்வாற்றானே சிவபெருமானது திருவருட் பெருமையை இடைவிடாது சிந்தித்து உணர்ந்து, அங்ஙனம் உணர்ந்த வாற்றால், சிவாகமப் பொருளைக் கூறத்தொடங்கினேன்.
Special Remark:
முதலிரண்டு அடிகளும் ஆசிரிய வணக்கங்கூறும் கருத்துடையன. `மந்திரம்` என்பது `மனத்தில் நிலைத்து நிற்பது` எனவும் பொருள்தருமாதலின், பின்னிரண்டடிகளால் நூற்பெயர்க் காரணமும் புலப்படுத்தவாறாயிற்று, இதனானே நாயனார் சிவாக மங்களை மொழிபெயர்த்துச் செய்யாது, அவற்றது தெளிந்த பொருளையே திரட்டி இந்நூலால் அருளிச் செய்கின்றார் என்பது பெறப்பட்டது. படவே, ``ஆகமம்`` என்றது அவற்றின் தெளிந்த பொருளையாயிற்று. சிவாகம நெறியே `சைவம்` எனப்படும் சிவநெறி யாதலின், நாயனார் தமிழ்நாடு செய்த தவப்பயனானே இங்கு எழுந் தருளியிருந்து, அந்நெறியின் முறைமையை இந்நூலால் அறியச் செய்தார் என்க.