ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்திலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

English Meaning:
Agamic Truths In Tamil

Those who wish to attain the Lord but waste their lives without making any efforts or performing penance will continue to be reborn repeatedly. To prevent such wasted births and to convey the various ways in which souls can attain the Lord, the Guru Lord taught me those ways and sent me here to deliver them in Tamil.
Tamil Meaning:
முற்பிறப்பில் நன்கு முயல்கின்ற தவத்தைச் செய்யாதவர், பின்னை நற்பிறவியைப் பெறுதல் எவ்வாறு கூடும்! கூடாது. ஆகவே நான்செய்த தவம் காரணமாக இறைவன் என்னைத் தன்னைத் தமிழ்மொழியால் நன்றாகப் பாடும் வண்ணம் செவ்விய முறையால் படைத்தான்.
Special Remark:
`ஆதலால் இதனைச் செய்கின்றேன்` என்பது குறிப் பெச்சம். மூலன் உடம்பில் புகுதற்குமுன்னே இருந்தநிலையை முற் பிறப்பாகவும், அதற்குப்பின் இருந்த நிலையைப் பிற்பிறப்பாகவும் வைத்து, இதில் நாயனார் அருளிச் செய்தார். ஆகவே, `படைத்தனன்` என்றது, மூலன் உடம்பில் இருக்கச் செய்ததையேயாயிற்று. தவம் இன்றியாதொன்றும் ஆகாது என்பதே முதல் இரண்டு அடிகளால் உணர்த்தப் பட்டது. `தமிழ்செய்தல்` என்னும் இரண்டாவதன் தொகை ஒருசொல் நீர்மைத்தாய்ப் பாடுதல் எனப் பொருள்தந்து, ``தன்னை`` என்றதற்கு முடிபாயிற்று. `தமிழ்ச்செய்யுமாறே` என்பதும் பாடம். இரண்டாம் அடியை முதலில் வைத்துரைக்க.