ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்
சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி
மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை
உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே.

English Meaning:
Garland Of Mantras
The Heavenly Beings with folded hands approach
Nandi, the Lord above and free of the bonds of birth;
Deep in their hearts the Holy Hymns revolve
Forget not to chant the chain of holy hymns.
Tamil Meaning:
தேவர் பலரும், பிறப்பில்லாத முதல்வனும், `நந்தி` என்னும் பெயருடையவனும் ஆகிய சிவபெருமானைத் தூய்மையுடன் சென்று கைதொழுது இம் `மந்திரமாலை` நூலை மறவாது மனத்துட் கொள்வர். ஆகவே, நீவிரும் இதனை உறுதியாக நின்று ஓதுதல் வேண்டும்.
Special Remark:
`உண்மைச் சிவநூல் எங்கு உளதாயினும் அதனைத் தேவர் மகிழ்ச்சியோடும் கைக்கொண்டு போற்றுவர்` என்னும் துணிவு பற்றி; ``வானவர் மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை`` என்றார். இக்கருத்தே பற்றிச் சேக்கிழாரும், `ஞானசம்பந்தர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை வானமும் நிலனுங்கேட்க அருளிச்செய்தார்` என்றும், `நாவுக்கரசரது திருப்பெயரை உலகேழினும் மன்னுக என்று இறைவன் அருளிச்செய்தான்` என்றும் கூறினார். ``மந்திர மாலை`` என்றது நூற் பெயர் குறித்தவாறு. எனவே, இவை இரண்டுபாட்டாலும் நூற் பெயரும், நூலது பெருமையும் கூறப்பட்டனவாம்.