ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.

English Meaning:
Splendour Of Tamil Agamas
In the human body He placed the digesting fire.
To prevent the flooding of the seven worlds He placed a cosmic fire,
To prevent the eruption of egoism He has given us the Tamil Sastras,
He who gave all these is the Supreme.
Tamil Meaning:
உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப்படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல் களையும் கற்பாரின்றி வீணேகிடக்கவையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.
Special Remark:
`ஆகவே, தமிழாலாய இந்நூலும் மூவாயிரம் பாடலுள் இன்றியமையாப் பொருள்களைக் கூறுவதாய் அமையும்` என்பதாம். `இலட்சம் கிரந்தம், கோடி கிரந்தம் என்றாற்போல் வனவற்றை நோக்க, இம்மூவாயிரம் பாடல் எம்மட்டாய் எல்லா ஆகமங்களுமாகும் என்று இகழற்க` என்றவாறு. இதனானே, `சில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவினராய்ச் சுருங்கிய நில வுலகத்தின் கண் வாழும் சகலராய மக்கட்கு ஏற்புடையன தமிழ் நூல்களே` என்பதும் குறித்தவாறு காண்க. ``உலகேழ்`` என்றது நாவலந்தீவு முதலிய ஏழு தீவுகளை. நாயனார் இந்நூல்செய்த காலத்தில், `தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, திருவாசகம், திருக்கோவையார்` என்னும் இவையே தமிழ்மொழியில் சிறந்த நூல்களாய் விளங்கிப் பயனைக் குறை வின்றித் தந்தமையின்; ``தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் - பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே`` என்றார். காரைக்காலம்மையார் பாட்டு முதலாக இன்று பதினொன்றாந் திருமுறையில் உள்ளனவற்றுள் சில, நாயனார் காலத்து இருந்தனவா என்பது ஆராய்ந்துணரத் தக்கது. மாணிக்கவாசகர் தாம் கூறும் தலங்களுள் திருவிடைமருதூரைக் குறித்துத் திருவா வடுதுறையைக் குறியாமையால், இந்நாயனாராலே அத்தலம் `நவகோடி சித்தபுரம்` என்பது முதலிய பல சிறப்புக்களைப் பெற்றது, அவர் காலத்திற்குப் பின்னரே என்பது துணியப்படும். நாயனாரது காலத்தில் திருவாவடுதுறை பொதுவான ஒரு சிவதலமாய் இருந்தது எனவும், எக்காரணத்தாலோ இறைவன் திருவருள் இவரை அத்தலத்தில் இருத்தியது எனவும் கொள்க. `கோகழி` என்பதைத் `திருவாவடு துறை` எனச் சிலர் கருதுதல் பொருந்துவதாய் இல்லை.
இப்பாட்டின் பின்பதிப்புக்களில் காணப்படும் ``அடிமுடி காண்பார்`` என்னும் பாட்டுச் சிவபரத்துவத்தில் இருத்தற்குரியது.