ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

செப்பும் சிவாகமம் என்னுமப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில்ஒரு கோடி யுகமிருந் தேனே.

English Meaning:
Witnessed Divine Dance
Flashed in my mind the mystic name of Sivagama;
Straight I rose to Arul Nandi`s Holy Feet;
These eyes witnessed, enthralled,
The surpassing Dance in Holy Sabha;
Thus I lived and joyed for seven crore Yugas.
Tamil Meaning:
உயர்த்துச் சொல்லப்படுகின்ற `சிவாகமம் என்னும் பெயரையுடைய நூலைப் பெற்றபின்பும், அவற்றின் பொருளை உள்ளவாறு உணர்த்துகின்ற நந்திபெருமானது ஆணை வழி, அழிவில்லாத தில்லையம்பலத்தை அடைந்து அங்குச் சிவபெருமான் செய்யும் ஒப்பற்ற நடனத்தைக் கண்டு மீண்டபின், உடம்போடிருக்க உடன்படாத நிலையிலே பலகாலம் உடம்போடு இருந்தேன்.
Special Remark:
இருந்தது கயிலைத் தாழ்வரையிலாம். இவ் வரலாற்றைத் தமக்கு இயைபில்லாமைபற்றிச் சேக்கிழார் கூறிற்றிலர் என்க. மண்ணுலகத்தார் மன்றின்கட்சென்று திருக்கூத்துக் காண்டல் இன்றியமையாதது என்னும் மரபு நிலைபெறுதற்கு நந்திதேவர் நாயனாரை அது செய்யுமாறு பணித்தருளினார் எனக் கொள்க. அநுபவ ஞானம் கைவரப்பெற்றோர் உடம்பொடு நிற்க விரும் பாமையை வாதவூரடிகளது நிலைபற்றி உணர்க. ஞானம் கைவந்தபின் நாயனாரது நிலை இதுவாயினும், அதற்கு முன்னர் அவர் நெடுங்காலம் இருக்க விரும்பிச் செய்த பெருந்தவம் தனது பயனைத் தந்து நின்றமை யின், அவர் அவ்வாறே இருத்தல் வேண்டுவதாயிற்று என்பதை அவர் அடுத்தபாட்டிற் கூறுதல் காண்க. இவ்வாற்றானே இவரைச் சேக்கிழார், `அணிமாதி சித்திபெற்றவர்` எனக் குறித்தல் காண்க. ஒப்பு - உடன்பாடு. இவ்வாறு உடன்பாடின்றி இருந்தமையால், ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் யுகம்போலத் தமக்குத் தோன்றின என்பது தோன்ற, ``எழுகோடியுகம் இருந்தேன்`` என்றார். பலவற்றைக் குறித்தற்கு, `கோடி` எனக்கூறலும், பலவற்றைக் குறிக்கு மிடத்து ஏழென்னும் எண்ணோடு தொடர்புபடுத்தலும் வழக்கு. எனவே இன்னோரன்ன வாக நாயனார் கூறுவனவற்றிற்கு, `பன்னெடு நாள் இருந்தார்` என்னும் பொதுப்பொருளே கொள்ளலாவது அறிக. இது பற்றியே நாயனாரது வாழ்நாளைச் சேக்கிழார் அவரது நூலின் பாடற்கணக்கொடு தொடர்பு படுத்தி, `மூவாயிரம் ஆண்டு` என வரையறுத்து, `பாடலும் மூவா யிரம், நாயனார் வாழ்ந்த ஆண்டும் மூவாயிரம்` என்னும் நயம்பற்றி, `ஓராண்டுக்கு ஒன்றாக ஒன்றவன்றான் என எடுத்து இந் நூலை அருளிச் செய்தார்` எனக்குறித்தருளினார். நாயனார் தாம் வாழ்ந்த காலத்தை `மூவாயிரம் ஆண்டு` என ஓரிடத்தும் குறியாமையை நோக்குக.