ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

English Meaning:
God`s Deep Mystery
The saints and celestials seeking liberation,
Listen to His exposition at the sacred foothill,
And singing His glory gain realization.
Others indifferent do not.
Tamil Meaning:
மன்னிய வாய்மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத் தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக்கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தி யருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.
Special Remark:
`அதனால், அவற்றை வேதத்திற்குப் புறம்பான நூல் என்று இகழ்வர். அவர் என்னையும் இகழ்வராதலின், அது பொருளன்று` என்பது குறிப்பெச்சம். மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, `பத்திமையால் தத்துவஞானம் தாழ்வரை உரைத்தது` எனக்கூட்டி உரைக்க. ``உரைத்தது`` என்னும் பயனிலைக்கு எழுவாய் முன்னைப் பாட்டினின்றும் வந்தது. `பத்திமையால் உரைத்தது` எனவே, அறியார் அஃதில்லாதோர் என்பது விளங்கிற்று. இதனால், `வேதம் உலகர்பொருட்டும், சிவாகமம் சத்திநிபாதர் பொருட்டும் சிவபெருமானால் செய்யப்பட்டன` என்பது சொல்லப்பட்டது.
இதனை,
``வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள்;
வேறுமுள நூல்இவற்றின் விரிந்த நூல்கள்;
ஆதிநூல் அனாதிஅம லன்தருநூல் இரண்டும்;
ஆரணநூல் பொது; சைவம் அருஞ்சிறப்பு நூலாம்;
நீதியினால் உலகர்க்கும் சத்திநிபா தர்க்கும்
நிகழ்த்தியது``
எனச் சிவஞானசித்தி விளக்குதல் காண்க.
பாயிரத்திறுதியில் நூற்பாட்டின் தொகையும், நூற்பயனும் கூறுகின்றார்.