ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - பாயிரம்

பதிகங்கள்

Photo

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

English Meaning:
Power Of Prayer
By words spoken in Truth`s luminous accents
Rising on sweetest music`s pious heights
Even Brahma who after Him created this our world,
All, all, seek His imperishable Light.
Tamil Meaning:
தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசைபோல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெரு மையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.
Special Remark:
`அவ்வாற்றால் ஆகமத்தின்வழிச் சிறிது கூறு கின்றேன்` என்பது குறிப்பெச்சம். எனவே, `அம்முதனூற் பொருளை யுடையது என்பதுபற்றி அறிவுடையோர் இந்நூலை இகழார்` என்பது கருத்து. `மதித்தவர் உள்ளே இன்னிசைபோல எழுகின்ற ஈசனை` எனக் கூட்டுக. ``இன்னிசை வீணையில் இசைந் தோன் காண்க`` (தி.8 திருவாசகம் . திருவண்டப்பகுதி - 35) என்றமை நினைக்கத்தக்கது. பின்னைப் படைத்தல் - மீளப் படைத்தல்.