ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

தானே புலன்ஐந்துந் தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்
தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே. 

English Meaning:
Seek His Grace, the Senses Get Controlled
Surely then the senses five under your control come,
Surely then the senses five back to their native homes retreat,
Surely then the senses five turn inward
When the soul meets the Lord.
Tamil Meaning:
ஒருவன், `நான்` என்னும் முனைப்பு இன்றி ஞானாசாரியரை அடுத்து நிற்பானாயின், அவனது ஐம்புல ஆசை தன் னியல்பில் உலகப் பொருள்கள் மேல் செல்லாது அவன்வழிப்பட்டுச் சிவனிடத்திற் செல்வதாய்ப் பள்ள மடையில் வீழ்ந்து பயனின்றிக் கழிந்துகொண்டிருந்த நீர் அம்மடை அடைக்கப்பட்ட வழித் தேங்கி நின்று மேட்டுமேடையிற் போய்ப் பாய்ந்து பயன்தருதல் போலத்தன் அறிவினிடத்தே மாறுவதாகும்.
Special Remark:
`ஆதலின் ஞானத்தைப் பெற்றவனும், பயிற்சி வயத் தால் மீள அஞ்ஞான வயப்படாதிருத்தற்கு ஞானாசாரியரை விட்டு அகலாது நின்று வழிபடுதல் வேண்டும்` என்பது குறிப்பெச்சம். ``புலன்`` அவற்றின்மேல் செல்கின்ற ஆசை. அஃது ஒன்றேயாதல் பற்றி, ``தானே`` என ஒருமையாற் கூறினார். ``தன் வசம்`` இரண்டனுள் முன்னது, மாணவன்வசமும், பின்னது ஆசையின் வசமுமாம். தன் வசம் போயிடும் - சுதந்திரம் நீங்கப்பெறும். ``தன்னில்`` என்றதும், மாணவன் அறிவையே தன்முனைப்பு இழந்து செல்லுதலைத் ``தனித்து`` என்றார். `தனித்துத் தானேயாய்` என மாற்றி ஆக்கம் வருவித்து உணர்க. எம் பிரானை - எங்கள் சிவபெருமானை. ஞானத்தை உணர்த்துபவன் அவனேயாகலின், குருவை இவ்வாறு கூறினார். சந்தித்து - தலைப்பட்டு என்றது `பிரியா நின்று` என்றவாறு. `சந்தித்தலால்` என்பது ``சந்தித்து`` எனத் திரிந்து நின்றது. `சந்தித்தலால் ஆயிடும், போயிடும், மாறும்` என மேலே கூட்டுக.