ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை
அவ்வா றருள்செய்வன் ஆதி யரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ்
செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம். 

English Meaning:
As Much as You Strive, So Much is His Grace Bestowed
Even as you strive to reach Wisdom`s bounds,
Even so on you, Hara, the Being First, His Gracebestows,
In Sabha unique He dances for Uma to behold,
Like a Flaming Ruby in the Flaming Sky.
Tamil Meaning:
அனாதியாய் நிற்கின்ற சிவன் ஆதியாய் நின்று ஆன்மாக்களது அறிவின் எல்லையை எவ் வெவ்வளவினவாகக் காண்கின்றானோ அவ் வவ்வளவிற்கேற்பவே அவைகட்குத் தானும் தனது திருவருளைத் தருவன், அவன், நிகரில்லாத அருள்வெளியில். தனது சத்தி துணையாய் நிற்கப் பல்வேறான பொதுச் செயல்களைப் புரிகின்ற, நடுவுநிலையாகிய வானத்தில் உள்ள ஞான சூரியனும், மாணிக்க மணியும் ஆகலின்.
Special Remark:
ஆன்மாக்களினது அறிவு, மேல், ``களிம்பு`` (தி.10 பா.112) எனக் குறிக்கப்பட்ட ஆணவ மல சத்தியினது வன்மை மென்மைகட்கு ஏற்பச் சிறிதாயும், பெரிதாயும் நிற்கும். அதனால் அவ்வறிவு கொண்டு அவற்றால் விரும்பப்படுகின்ற பொருள்களும் இழிந்தனவும், உயர்ந் தனவுமாய் இருக்கும். வேண்டுவனவற்றை யன்றி வேண்டாதனவற்றைத் தரின் பயன்படாது ஒழியுமாதலின், வேண்டுவார் வேண்டுவனவற்றையே அவன் தருகின்றான் என்க.
``வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்`` -தி.6 ப.23 பா.1
என்று அருளிச் செய்ததும் இதனையேயாம். பின் இரண் டடிகளில் வெளிப்படைப் பொருள் இனிது விளங்கிக் கிடத்தலின், உள்ளுறைப் பொருளே உரைக்கப்பட்டது. `பொதுச்செயல்` என்றது, `தன்பொருட்டன்றி ஆன்மாக்கள் பொருட்டுச் செய்யும் செயல்` என்றபடி. `அச்செயல்களை வேண்டு வார் வேண்டுமாறே செய்தலின், அஃது அவனுக்குக் கோட்டம் ஆகாது` என்றற்கு நடுவு நிலைமையைக் குறித்தார். அதனால், `பெத்தான் மாக்களுக்கு உலகியலையும், முத்தான்மாக்களுக்கு வீட்டினையும் தருகின்றான்` என்பது போந்தது. படைப்புப் பல படியாய்க் காணப் படுதற்கும் இதுவே காரணம் என்பது உணர்க. ``செவ்வானில் செய்ய செழுஞ்சுடர்`` எனவந்த செம்மை இரண்டனுள் முன்னது நடுவு நிலைமையையும், பின்னது திரிபின்மையையும் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்றன. திரிபின்மை மெய்யறிவின் இயல்பாகலின், அதுவே அதற்குப் பொருளாய் உள்ளது. செழுஞ்சுடர் சூரியன், மாணிக்கம், ஒப்புயர்வற்ற தன்மையைக் குறிக்க வந்த உவமை. இறுதிக்கண் `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், `சொல்லொணாப் பெருமையை உடைய அதீத வாழ்வினைச் சிவன் பலர்க்கும் அளியாது, ஒரு சிலர்க்கே அளித்தல் என்னை` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. இதனுள் உள்ளுறை உவமமாய் நின்ற பின்னிரண்டடிகளால் திருக்கோயிலுள் இருக்கும் திருமேனியது சிறப்பிற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது என்க.