ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு
அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற்
செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.

English Meaning:
Jiva Lies Enclosed in Siva
The fierce rays of the sun beating upon the water,
The dissolved salt does in crystal shapes emerge;
That salt in the water dissolved becomes liquid again,
So does Jiva in Siva get redissolved.
Tamil Meaning:
கடல்நீரில் ஒன்றாய் நிற்கும் உவர்ப்புப் பின் ஞாயிற்றின் வெப்பத்தால் அந்நீரின் வேறாய் உருவெய்தி `உப்பு` எனப் பெயர்பெற்ற அப்பொருள், அந்நீரில் சேர்ந்தவழி அவ்வுரு வொழிந்து வேறுகாணப்படாது அந்நீரோடு ஒன்றாகும் முறைமை போல, உயிர் சிவத்தோடு என்றும் ஒன்றாயே இருத்தற் குரியதாயினும், ஆணவ மலத்தின் தடையால், அநாதியே வேறாய்ப் பசுத்தன்மை எய்திச் சீவன் எனப் பெயர்பெற்று மாயை கன்மங்களையும் உடைய தாய் உழன்று, அத்தடை நீங்கப்பெற்ற பின்னர்ச் சிவத்தோடு சேர்ந்து வேறாய் நில்லாது ஒன்றாய்விடும்.
Special Remark:
செய்யுட்கு ஏற்ப, ``உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த`` என்றாராயினும், `உருச்செய்து உப்பெனப் பேர் பெற்ற` என ஓதுதல் கருத்தென்க. ``அவ்வுரு`` என்றதில் ``உரு`` என்றது பொருளை. ``கூடியது`` என்பதில் `ஆயின்` என்பது வருவித்து, ``கூடியதாயின்`` என உரைக்க. ``செப்பினில்`` என்பதில், இன், எதுகைநோக்கித் தவிர்வழி வந்த சாரியையாய் நின்றது. `செப்பிடில்` எனப் பாடம் ஓதுதலும் ஆம்.
இஃது, `ஆன்மாச் சிவத்தோடு ஒன்றாதலே இயற்கை; வேறு நிற்றலே செயற்கை` என்பதனைத் தக்கதோர் உவமங்காட்டி வலியுறுத்தவாறு. உப்பு, நீரின் குணமாகாது வேறு பொருளேயாதல் அறிந்துகொள்க.