ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்
கிருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே. 

English Meaning:
Siddhas Lose Themselves in Divine Tranquillity
In Siva they remained, seeing themselves in all,
Remained thus mutely gazing at Siva`s works manifold,
In silence witnessing Time`s three tenses,
They remained, lost, in Divine tranquillity.
Tamil Meaning:
சிவத்தைக் கண்டு அசைவற நின்று அப்பரிசாக அமர்ந்துநின்ற சிவசித்தர்கள் தம்மை அணுவாகச் செய்த மலம் நீங்கப் பெற்றமையால், அங்கு இங்கு என்னாது எங்குமாய், இறைநிறைவில் அழுந்தி நிற்பர். அந்நிலையில் அச்சிவன் உயிர்கள் பொருட்டுச் செய்கின்ற செயல்களையும், அச் செயல்கட்கு வாயிலாக அவன் தோற்றுவித்து நிறுத்தியுள்ள காலத்தின் தொழிற்பாட்டினையும் அறியும் ஆற்றலுடையவராய்த் தம்மை இழந்து நிற்றல் வந்தமையால் விளைந்த செயலறுதியிலே இருப்பர்.
Special Remark:
``நோக்கி, குறித்து`` என்றவற்றிற்கு இவ்வா றுரையாவிடில், ``இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே`` என்பதற்கு ஒவ்வாமை அறிக. தம்மை இழந்து செயலற்றவரது நிலை தாமத குண மிகுதியால் விளையும் சோம்பலில் நிற்பவர் நிலையோடு ஒத்தல்பற்றி ``இருந்தார் ... எய்திய சோம்பே`` என்றார். இது, பழிப்பதுபோலப் புகழ்ந்தது. பின் வருவதும் அது. சோம்பு, முதனிலைத் தொழிற்பெயர்; இதன்கண் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. இதனால், `சிவத்தைப் பெற்றவர் எல்லா அறிவாற்றலும் உடையராயினும், சிவத்தை அறிந்து அழுந்துதலல்லது பிறிதொன்றும் செய்யார்` என்பது கூறப்பட்டது.
``எல்லாம் அறியும் அறிவுறினும் ஈங்கிவர்ஒன்
றல்லா தறியார் அற``
எனத் திருவருட் பயனிலும் ஓதியவாறு அறிக.