ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியா
ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்
செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்
தப்பரி சாக அமர்ந்திருந் தாரே. 

English Meaning:
They Walk Into Light of Siva
Ascending thus the steps,
Thirty and six of Freedom`s ladder high,
Into the peerless Light of Bliss they walked;
And Siva, the inexplicable, they saw—
Having seen, realized and so stayed.
Tamil Meaning:
சிவசித்தர்கள் முப்பத்தாறு தத்துவங்களும் முத்தி நிலைக்கு ஏணிப் படிகளாக நிற்க அவற்றில் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து, இணையற்ற இன்பவடிவாம் உள்ளொளியாகிய அருளே உருவாய் நின்று, அவ்வருட்கு முதலாகிய சிவத்தையும் கண்டு, பின் அசைவின்றி அச் சிவமேயாய் இன்புற்றிருக்கின்றார்கள்.
Special Remark:
எனவே, `தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து அவற்றினின்றும் நீங்குதல் வேண்டும்` என்பதும், `தத்துவக் கூட்டமே தனக்கு நிலைக்களமாக நின்ற ஆன்மாவிற்கு அவற்றினின்றும் நீங்கிய பின்னர்ச் சிவனது அருளே நிலைக்களமாம்` என்பதும், `அந் நிலைக்களத்து நீங்காது நிற்பின் அவ் வருட்கு முதலாகிய சிவம் வெளிப்படும்` என்பதும், `அது வெளிப்பட்டவழி அதனிடத்து அசைவற நிற்கவே அதனால் பெருகி விளைகின்ற இன்பத்தில் மதுவுண்ட வண்டுபோல் ஆன்மா அழுந்தித் தன்னையும் மறந்து நிற்கும்` என்பதும் கூறியவாறாயிற்று. ஆகவே, இதனால், பாசத்தின் நீங்குமாறும், பின்னர்ச் சிவத்தைப் பெறுமாறும், பெற்றவழி இன்புற்றிருக்குமாறும் கூறப்பட்டனவாம். இதனுள் ``சிவம் கண்டு`` என்றது சிவதரிசனம் செய்தலையும், ``தான் தெளிந்து`` என்றது அதில் அதீதப்படுதலையும் கூறியனவாம்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
என்னும் திருக்குற(பா.341)ளும் தத்துவங்களை ஒவ்வொன்றாகச் சுட்டியறிந்து நீங்குதலின் மேல் நோக்குடைத்தாதல் அறிந்துகொள்க. கே்கிழாரும், கண்ணப்பர் திருக்காளத்தி மலையின் உச்சியில் இருக்கும் இறை வனைக்காண வேண்டி அம்மலையின் படிகளைக் கடந்தமைக்கு,
``பேணுதத் துவங்கள் என்னும் பெருகுசோ பானம்ஏறி
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல``
-தி.12 கண்ணப்பர் புராணம் - 103
என இத் தத்துவ முத்தரது செயலையே உவமையாகக் கூறுமாற்றால் இதனை இனிது விளக்கினமை காண்க.