ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்
அருமை எளிமை அறிந்தறி வாரார்
ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி
இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

English Meaning:
Senses Controlled, They Saw This World and Next
Who there be who, like our Lord, distinct know
The great and the small, the difficult and the facile?
They, like unto tortoise, drawing in senses five under the shell,
They heard and saw This and Next, all impurities dispelled.
Tamil Meaning:
பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் பிறர் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் தனக்குக் காவலாய் உள்ள ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.
Special Remark:
``பெருமை, சிறுமை`` என்பவை உலகியல் பற்றிக் கூறியவை. உலகியலில் பெரியராய்த் தன்னை நினையாதவர்க்கு இறைவன் அரியனாயும், உலகியலில் சிறியராயினும் தன்னை நினைவார்க்கு எளியனாயும் நிற்றலை,
``கனவிலும் தேவர்க் கரியாய் போற்றி
நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி``
-தி.8 போற்றித் திருவகவல். 143. 44
என்னும் திருவாசகத்தான் அறிக. `அவனது இத்தன்மையை அறிந்து, அன்பர்கள் முனைப்பின்றி அவன்பால் அடங்கி நிற்பர்` என்றற்கு இவற்றை எடுத்தோதினார். `கண்டறிவார், உண்டறிவார்` என்பன போல `அறிந்தறிவார்` என்பது ஒருசொல்லாய் நின்றது.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. -குறள் 126
எனத் திருவள்ளுவர் புலனடக்கத்திற்கு இவ்வுவமையைக் கூறினார்.
புலனடக்கித் தம்முதற்கண் புக்குறுவர் போதார்
தலன்நடக்கும் ஆமை தக.
எனத் திருவருட்பயனிலும் (பா.94) கூறப்பட்டமை காண்க. `கேட்டிருந்தார்` என்பது பாடம் அன்று.
இம் மூன்று திருமந்திரத்தானும், `அதீத நிலையில் நிற் போர்க்கு அறிவு இச்சை செயல்கள் உலகிடைச் செல்லுமாயின், அவை திருக்கோயில் வழிபாடு முதலிய அன்பு நெறியிற் செல்லுதலல்லது பிறிதாற்றிற் செல்லா`` என்பது கூறப்பட்டது. இந்நிலை ஞானசம்பந்தர் முதலிய நால்வரது செயல்களால் இனிது விளங்கும்.