ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 4. உபதேசம்

பதிகங்கள்

Photo

மலங்களைந் தாமென மாற்றி அருளித்
தலங்களைந் தான்நற் சதாசிவ மான
புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி
நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே. 

English Meaning:
He Broke Into My Soul`s Silent Depths
All our impurities He removes,
Our worldly existence He transmutes into spiritual life,
And dancing in the citsabha He controls our sensual passions
Knowing the purity of the soul He has come to reside there.
Tamil Meaning:
யாவரும் புகழும் அம்பலத்துள் ஆடுவோனாகிய சிவபெருமான், எனது பக்குவத்தை அறிந்து எனக்கு ஐந்து மலங்களையும் போக்கித் தன்னைத் தந்து, சுத்த தத்துவங்கள் ஐந்தினாலும் தான் ஐந்தொழில்புரிவோனாய் நிற்கும் கருத்தை என்னளவில் தவிர்த்தான். தவிர்த்து, நன்மையைத் தரும் திருவைந் தெழுத்தால் என் உள்ளத்தில் நீங்காது விரும்பி நின்றான்.
Special Remark:
`மலங்கள் ஐந்தாம், தலங்கள் ஐந்தான், புலம் களைந் தான், நலங்கள் ஐந்தான்` எனப் பிரித்துப் பொருள் கொள்க. `ஐந்த னானும்` என்பவற்றில் சாரியையும், உம்மையும் தொகுத்தல் பெற்றன. `மலங்கள் ஐந்தாம் என` என்றதற்கு, `மேல், அற்ற எனப்பட்ட மலங்கள் ஐந்து என்று சொல்லும்படி` என உரைத்து, `ஐந்து மலங்களும் அற் றொழியுமாறு` என்பது அதனாற் போந்த பொருளாக உரைக்க. ``அருளி`` என்றது, `தந்து` என்னும் பொருளது. அதற்கும், ``அறிந்து`` என்பதற்கும் செயப்படுபொருள் வருவித்து உரைக்கப்பட்டன. சுத்த தத்துவங்கள் சுத்த மாயையின் விருத்தியே (விரிவே) ஆகலின், அவற்றைத் ``தலங்கள்`` என்றார். ``சதாசிவம் ஆன`` என்றது, `சதா சிவன் முதலாக நின்ற` என்றவாறு. `அறிவு` என்னும் பொருளதாகிய `புலம்` என்பது இங்குக் கருத்தின்மேல் நின்றது. திரோதான சத்தி யோடு இயைந்து நின்று ஐந்தொழில் செய்வது பெத்தான்மாக்கள் பொருட்டேயாதலின், முத்தராகிய தம்மளவில் இறைவன் அக் கருத்தைத் தவிர்த்தான் என்றார். நலம் தருவனவற்றை, `நலம்` என்றார். நலம் - வீடுபேறு. `அதனைத் தரும் ஐந்து` எனவே, முத்தி பஞ் சாக்கரம் என்பது போந்தது. இஃது அற்ற மலங்களின் வாதனை வந்து மீண்டும் தாக்காதவாறு செய்யுமாகலின், உள்ளத்தில் சிவன் நீங்காது நிற்கும் நிலை அதனால் நிகழ்வதாகக் குறித்தார். `மலங்கள் ஐந்து, தலங்கள் ஐந்து, நலங்கள் ஐந்து` என்பன இவை என்பதனைப் பின்னர் விளக்குவார். ``அப் பொது`` என்றதில் அகரம் பண்டறி சுட்டு.
இதனால் சிவன் குருவாய் வந்து செய்த அருட்செயல்கள் ஒருவாறு வகுத்துக் கூறப்பட்டன.